Published : 22 Nov 2019 04:27 PM
Last Updated : 22 Nov 2019 04:27 PM

தேசிய அளவிலான மைக்ரோசாஃப்ட் கல்வித் திருவிழா: சிவகாசி அரசுப் பள்ளி செயல்திட்டம் தேர்வு!

தேசிய அளவிலான மைக்ரோசாஃப்ட் கல்வித் திருவிழாவில் சிவகாசி அரசுப் பள்ளியின் செயல்திட்டம் தேர்வு செய்யப்பட்டு, காட்சிப்படுத்தப்பட்டது.

மைக்ரோசாஃப்ட் உபகரணங்கள் மூலம் சிறப்பான செயல்திட்டங்களை மேற்கொள்ளும் போட்டி அண்மையில் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் உள்ள பள்ளிகள் கலந்துகொண்டன.

இதில், விருதுநகர் மாவட்டம், சிவகாசி கல்வி மாவட்டம், நாரணாபுரம் அரசுப் பள்ளி ஆசிரியர் கருணைதாஸ் வழிகாட்டுதலில் மாணவர்கள் உருவாக்கிய மைக்ரோபிட் கலாம் சாட் செயல்திட்டத்திற்கு மைக்ரோசாப்ட் நிறுவனம் பாராட்டி, சான்றிதழ் வழங்கியது.

மேலும் அந்த செயல்திட்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனம் டெல்லியில் வைத்து நடத்திய EDU-2019 நிகழ்வில் கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விளக்கம் அளிக்கச் செய்ய வாய்ப்பினையும் வழங்கியது. இந்த செயல்திட்டத்தினைக் கண்ட கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் தமிழக அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் மாணவர்களின் சாதனைக்குப் பாராட்டு தெரிவித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவன இணை இயக்குநர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜீவ் கௌடா ஆகியோர் சான்றிதழ் வழங்கிச் சிறப்பித்தனர். இந்த நிகழ்வில் சுமார் ஐநூறு கல்வியாளர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக மைக்ரோபிட்-கலாம்சாட் செயற்கைக்கோளை உருவாக்க வழிகாட்டிய ஆசிரியர் கருணைதாஸ் கூறும்போது, ''3 வாட் பாட்டரியில் இயங்கும் மைக்ரோபிட் என்ற மிகச்சிறிய சாதனத்தினை அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்படுத்தி, பைத்தான் என்ற மென்பொருள் மூலம் செயல்திட்டத்தை உருவாக்கினர், அதை மைக்ரோபிட் சாதனத்தில் பதிவு செய்து பலூன் செயற்கைக்கோளில் இணைத்து அனுப்பினர்.

அது புவியில் இருந்து ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை தகவல்களைப் பதிந்து செய்யும். விண்வெளிக்கு அருகே வரை சென்று, தகவல்களைப் பதிவு செய்த பின்பு குறிப்பிட்ட தூரத்தில் வெப்பம் மற்றும் அழுத்தம் காரணமாக பலூன் வெடிக்கும். அதனுடன் அனுப்பிய பாராசூட் உதவியுடன் அனுப்பிய மைக்ரோபிட்-கலாம்சாட் தரையினை வந்தடையும்.

இவ்வாராய்ச்சி முடிவுகள் மற்றும் தகவல்கள் விண்வெளி பற்றி ஆராய்ச்சி செய்யும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பாக ஆராய்ச்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும். இதன் அடுத்தகட்டமாக சாதாரண மனிதர்களும் விண்வெளிக்குச் சென்று வருவது சாத்தியமா என ஆராய உள்ளோம்.

தொழில்நுட்ப வளர்ச்சி கிராமம், நகரம் என்ற வேறுபாடுகளைத் தகர்த்துவிட்டது. திறமை இருந்தால் எந்தவொரு மாணவரும் வெற்றி பெறலாம். கிராமத்தில் இருக்கும் மாணவர்களும் சாதனை படைக்க முடியும். அதைத்தான் நாங்களும் செய்திருக்கிறோம்'' என்கிறார் ஆசிரியர் கருணைதாஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x