

எனக்கு நல்ல கல்வியைக் கொடுக்க வேண்டும் என்பதற்காக எனது தாய் சிரமப்பட்டார் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
உலக மீனவர் தினம் நேற்று (நவ.21) கொண்டாடப்பட்டது. இதையொட்டி மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், கன்னியாகுமரியில் உள்ள குளச்சலில் மீனவப் பெண்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் கூறும்போது, ''என்னுடைய அப்பா கவுன்சிலராக இருந்தவர். கவுன்சிலர் என்றாலும் அரசியல் பணிகளை மட்டுமே கவனித்துக் கொண்டார்.
எனது அம்மாதான் எனக்கு நல்ல கல்வியைக் கொடுக்கவேண்டும் என்று சிரமப்பட்டார். அந்தக் காலத்திலேயே அரிசி வியாபாரம், புடவை வியாபாரம், சீட்டு பிடிப்பது உள்ளிட்ட வேலைகளை என் அம்மா செய்வார். அதில் கிடைக்கும் பணத்தை வைத்துதான் என்னைப் பள்ளியில் படிக்க வைத்தனர். படித்ததால்தான் இந்த நிலையில் இருக்கிறேன்.
நீங்களும் உங்களின் குழந்தைகளைப் படிக்க வைக்க வேண்டும். மீனவர்களின் கல்வி மேம்பட தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது'' என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
இந்த விழாவில் எம்.பி. வசந்தகுமார், அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.