Published : 22 Nov 2019 12:20 PM
Last Updated : 22 Nov 2019 12:20 PM

நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் வெறும் 12% மட்டும் தான் இடஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

ஐஐடி, ஐஐஎம்களில், கடந்த காலங்களில் சமூக நீதி மறுக்கப்பட்டதற்கு மத்திய அரசு பரிகாரம் செய்ய வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக ராமதாஸ் இன்று (நவ.22) வெளியிட்ட அறிக்கையில், "இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், இந்திய மேலாண்மை கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பேராசிரியர்களை நியமிக்கும்போது இனி கண்டிப்பாக இட ஒதுக்கீட்டைக் கடைபிடிக்க வேண்டும் என்று அவற்றின் நிர்வாகங்களுக்கு மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது. சமூக நீதியைக் காக்கும் நோக்குடன் மத்திய அரசு மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கை மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.

இந்தியாவின் தொழில்நுட்ப மற்றும் மேலாண்மை உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர்கள் நியமனத்தில் இழைக்கப்பட்டு வரும் அநீதிக்கு எதிராக பாமக உள்ளிட்ட கட்சிகள் குரல் கொடுத்து வந்த நிலையில், மத்திய மனிதவளத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் கூட்டம் அண்மையில் டெல்லியில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திற்குத் தலைமையேற்ற நிலைக்குழுவின் தலைவரும், வாஜ்பாய் அமைச்சரவையில் சமூக நீதித் துறை அமைச்சராக இருந்தவருமான சத்தியநாராயண் ஜாட்டியா, ஐஐடி, ஐஐஎம் ஆகிய உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதற்குக் கடும் கண்டனம் தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்தே இட ஒதுக்கீட்டை முழுமையாகச் செயல்படுத்த வேண்டும் என்று ஐஐடி மற்றும் ஐஐஎம்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை ஆணையிட்டிருக்கிறது.

மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு அறிமுகம் செய்யப்பட்டு 30 ஆண்டுகள் ஆகின்றன. பட்டியலினம் மற்றும் பழங்குடியினருக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்தே மக்கள்தொகை அடிப்படையிலான இட ஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது. அதன்படி ஒட்டுமொத்தமாக 49.50% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.

ஆனால், நாடு முழுவதும் உள்ள 23 ஐஐடிகளில் வெறும் 12% மட்டும் தான் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும் கூட நுழைவுநிலைப் பணிகளான உதவிப் பேராசிரியர் பணிகளில் மட்டும் தான் இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. சென்னை ஐஐடியில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியலினத்தவர், பழங்குடியினருக்கும் சேர்த்து மொத்தமாக 12.40 விழுக்காடு மட்டுமே இட ஒதுக்கீடு வழங்கப்பட்டிருக்கிறது.

சென்னை ஐஐடியில் மொத்தமுள்ள 684 ஆசிரியர் பணிகளில் 599 பணிகள், அதாவது 88% இடங்கள் உயர் சாதியினருக்கு வழங்கப்பட்டுள்ளன. பிற்படுத்தப்பட்டோருக்கு 66 இடங்கள், பட்டியலின வகுப்பினருக்கு 16 இடங்கள், பழங்குடியினருக்கு 3 இடங்கள் மட்டுமே கிடைத்துள்ளன.

பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்தால் அவை பரிசீலனைக்குக் கூட எடுத்துக் கொள்ளாமல் நிராகரிக்கப்படுவது தான் கொடுமையாகும்.

2018 ஆம் ஆண்டில் ஆசிரியர் பணிக்காக விண்ணப்பித்த 682 பேரில் 16 பேரும், 2019 ஆம் ஆண்டில் 271 பேரில் 5 பேரும் மட்டும் தான் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர் என்பதிலிருந்தே ஐஐடிகளில் சமூக நீதி எந்த அளவுக்குப் படுகொலை செய்யப்படுகிறது என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ளலாம்.

ஐஐஎம்களில் நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. இந்தியாவில் மொத்தம் 18 ஐஐஎம்கள் உள்ளன. அவற்றில் 16 நிறுவனங்களின் இட ஒதுக்கீட்டு விவரங்கள் கிடைத்துள்ளன. அவற்றில் 16 ஐஐஎம்களில் 90% ஆசிரியர் பணிகள் உயர் சாதியினருக்கே வழங்கப்பட்டுள்ளன. இந்த 16 ஐஐஎம்களிலும் பழங்குடியினர் ஒருவர் கூட ஆசிரியராக இல்லை. 12 நிறுவனங்களில் பட்டியலின ஆசிரியர்களே இல்லை. 7 நிறுவனங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு பிரதிநிதித்துவம் இல்லை. ஐஐஎம்களில் இட ஒதுக்கீடு இன்னும் ஒற்றை இலக்கத்தைத் தாண்டவில்லை. அந்த அளவுக்கு அங்கு சமூக நீதி முளையிலேயே கருக்கப்படுகிறது.

மத்திய அரசு உயர் கல்வி நிறுவனங்களில் 49.50% இட ஒதுக்கீடு நடைமுறையில் இருந்தாலும் கூட, ஐஐடிகளும், ஐஐஎம்களும் இட ஒதுக்கீட்டை மறுப்பதற்கு மூல காரணம் 40 ஆண்டுகளுக்கு முன்னர் 1970-களில் மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை பிறப்பித்த ஆணைதான். அந்த ஆணையில் தொழில்நுட்பப் பணிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்கத் தேவையில்லை என்று கூறப்பட்டிருப்பதால், அதையே காரணம் காட்டி, ஐஐடிகளும், ஐஐஎம்களும் 40 ஆண்டுகளாக சமூக நீதியை மறுத்து வருகின்றன.

ஆனால், இப்போது மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்துள்ள ஆணையில், கடந்த காலங்களில் பிறப்பிக்கப்பட்ட ஆணைகளைப் பொருட்படுத்தத் தேவையில்லை என்றும், இப்போதுள்ளவாறு பிற்படுத்தப்பட்ட, பட்டியலின, பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவால் ஐஐடிகளிலும், ஐஐஎம்களிலும் இனி சமூக நீதி படுகொலை செய்யப்படாதே தவிர, இதுவரை படுகொலை செய்யப்பட்டது, செய்யப்பட்டது தான். இட ஒதுக்கீட்டைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகவே அடுத்த பல ஆண்டுகளுக்கு ஆசிரியர்களே நியமிக்கப்படாமல் போகலாம்.

எனவே, கடந்த காலங்களில் சமூக நீதி மறுக்கப்பட்டதற்கு மத்திய அரசு பரிகாரம் செய்ய வேண்டும். அதற்காக ஐஐடிகள் மற்றும் ஐஐஎம்களில் எத்தனை பணியிடங்களை பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு ஒதுக்கினால் அவர்களுக்கு முறையே 27%, 15%, 7.5% இட ஒதுக்கீடு உறுதி செய்யப்படுமோ, அத்தனை பணியிடங்களை கூடுதலாக உருவாக்க வேண்டும்.

அவை அனைத்தையும் பின்னடைவுப் பணியிடங்களாக அறிவித்து, அவற்றை முழுக்க முழுக்க இட ஒதுக்கீட்டுப் பிரிவினரைக் கொண்டு நிரப்ப வேண்டும். அது தான் சமூக நீதியை தழைக்கச் செய்ய ஒரே வழியாகும்" என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x