

பள்ளிகளில் கோடை விடுமுறை போன்று,காற்று மாசு காரணத்தால் புகை விடுமுறையை டெல்லி பெற்றோர்கள் விரும்புவதாக புதிய கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
காற்றின் தர அளவின்படி(ஏக்யூஐ), காற்றில் உள்ள நுண் துகள்களின் அளவு 201-300 வரை இருந்தால் மோசமானநிலை. 301-400 வரை மிக மோசம். 401-500 மிகத்தீவிரம். 500 மேல் சென்றால் அவசரநிலை.
தலைநகர் டெல்லியில் நவம்பர் 1-ம்தேதியன்று, காற்றின் உள்ள நுண்துகள்களின் அளவு 580ஐ தொட்டது. இதனால், மருத்துவ அவரசநிலை அறிவிக்கப்பட்டு, பள்ளிகளுக்கு நவம்பர் 8-ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், டெல்லியின் காற்று மாசு இன்னும் கட்டுக்குள் வராமலே உள்ளது. தற்போது நிலவரப்படி டெல்லியில், மோசமாநிலையிலே(254) காற்றின் தரம் உள்ளது. இதனால், பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளிட்ட அனைவரும், சுவாச முகமுடியை அணிந்து உள்ளனர்.
இதற்கிடையில், ‘லோக்கல் சர்க்கிள்’ என்ற அமைப்பு ஆன்லைனில் ஒரு ஆய்வு நடத்தியது. இதில், சுமார் 10,000 பேர் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.
அதில், 13 சதவீதம் பேர் காற்று மாசுகாரணமாக ஏற்பட்ட உடல் நல கோளாறால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும், 29 சதவீதம் பேர் மருத்துவரை அணுகியதாகவும், 16 சதவீதம் பேர் டெல்லியை விட்டு வேறு இடத்துக்கு பயணம் செய்ய விரும்பியதாகவும் கருத்து தெரிவித்துள்ளனர்.
அதேபோல், சுமார் 74% பேர், தங்களின் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு, ஆண்டுதோறும் நவம்பர் 1 முதல் 20-ம் தேதி வரை காற்று மாசு காரணத்தால், ‘புகை விடுமுறை’ வேண்டும் என்று கூறியுள்ளனர். இதை அரசு பரிசீலனை செய்யவேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
மேற்கில் இருந்து நவம்பர் 20-ம் தேதி காற்று வீச தொடங்கும் என்பதால், அதன் பிறகு டெல்லி காற்று மாசு குறைந்துவிடும் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.