Published : 14 Nov 2019 06:05 PM
Last Updated : 14 Nov 2019 06:05 PM

ஆண்டுக்கு 2 இலவச மருத்துவப் பரிசோதனைகள்: காஷ்மீர் மாணவர்களுக்கு நடத்த முடிவு

ஜம்மு

ஜம்மு காஷ்மீரில் பள்ளிக் குழந்தைகளுக்கு ஆண்டுக்கு 2 முறை இலவச மருத்துவப் பரிசோதனைகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர் பள்ளிக் கல்வித்துறை சார்பில் புதன்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டம் முடிவடைந்ததைத் தொடர்ந்து துணைநிலை ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஊடகங்களிடம் பேசினார்.

அவர் கூறும்போது, ''ஜம்மு காஷ்மீர் நிர்வாகம், ஆண்டுக்குக் குறைந்தது 2 முறை இலவசமாக பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்த உள்ளது. இதற்கான அறிவுரைகளை துணைநிலை ஆளுநர் கிரிஷ் சந்தர் அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

மாணவர்களுக்கு உடல்நல அட்டைகளை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளன. அதேபோல குழந்தைகளின் உடல் நிலையை அறிந்துகொள்வதற்காக மருத்துவப் பரிசோதனைகளின்போது பெற்றோர் உடன் இருக்க வேண்டும்.

சுகாதாரத் துறையுடன் இணைந்து மருத்துவப் பரிசோதனைக்கான காலண்டரை, பள்ளிக் கல்வித்துறை தயார் செய்யவேண்டும். மழைக்காலம், கோடை காலம் என இரண்டு பருவ காலங்களில் முறையே டிசம்பர் மற்றும் மார்ச்சில் பரிசோதனைகள் நடைபெற வேண்டும்.

அதேபோல அனைத்துப் பள்ளிகளிலும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் குடிநீர் 100 சதவீதம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். காலியாக உள்ள ஆசிரியர் இடங்கள் அனைத்தும் உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

கல்வியின் தரத்தை உயர்த்த ஆசிரியர்களுக்கு தொடர் பயிற்சிகள் அளிக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் வலியுறுத்தினார். இந்தக் கூட்டத்தின் போது பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் சரிதா சவுஹான் மற்றும் மூத்த அதிகாரிகள் உடன் இருந்தனர்'' என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x