

சுப.ஜனநாயகச்செல்வம்
மதுரை
மரங்கள், கழிப்பறை வசதிகளுடன் கூடிய சுகாதாரத்துடன் திகழ்கிறது மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள உச்சப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி. இப்பள்ளியின் தலைமைஆசிரியை நா.சாந்தி (50). இவர் மாணவர்களின் தனித் திறமைகளை வளர்ப்பதுடன், அவர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் திகழ்கிறார்.
இந்தப் பள்ளியில் 225 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். சுமார்2 ஏக்கரில் அமைந்துள்ள பள்ளி வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக கணினிகள், எல்சிடி புரொஜெக்டர், மைக்செட் போன்ற வசதிகளும் உள்ளன. தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் தலைமை ஆசிரியர் நா.சாந்தி மாணவ-மாணவிகளுக்கு பல்வேறு வசதிகளை ஏற்படுத்தியுள்ளார். இவர் 2017-18-ம் ஆண்டு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் கூறியதாவது:கடந்த 2006-ல் தலைமை ஆசிரியராக இங்கு பணியில் சேர்ந்தேன். முதலில் பள்ளி மாணவர்கள் கழிப்பறையை பயன்படுத்தும் வகையில் செய்தோம். தனியார் நிறுவனங்களின் உதவியுடன் கணினி, எல்சிடி புரொஜெக்டர், மைக்செட் போன்ற வசதிகளை ஏற்படுத்தினோம். மேலும், மாணவர்களுக்கு அரசு வழங்கும் சீருடைகள் தவிர தனியார் நிறுவனங்கள் மூலமும் கூடுதல் சீருடைகள் வழங்கியுள்ளோம்.
மாணவர்களின் தனித்திறமைகளை வளர்க்கும் வகையில் மகாத்மா காந்திபிறந்த நாள், மகாகவி பாரதியார் பிறந்தநாள், ஆசிரியர் தின விழாக்களில் மாணவர்களை பங்கேற்கச் செய்து அவர்களின் தனித் திறமைகளை வளர்த்துவருகிறோம். கணிதம், அறிவியல்போன்ற பாடங்களை ஆடல், பாடல், மூலம்கற்றுத்தருகிறோம். காலை இறைவணக்கத்தின்போது ஒவ்வொரு மாணவனும் தானே உருவாக்கிய அறிவியல் உபகரணங்கள் குறித்து விளக்கச் சொல் கிறோம்.
மேலும், யோகா மற்றும் தற்காப்புக் கலைகளையும் கற்றுத் தருகிறோம். பள்ளி வளாகத்தை தூய்மையாகவும், கழிப்பறையை சுகாதாரமாகவும் பயன்படுத்தச் சொல்லித் தருகிறோம். இதன் மூலம் தமிழக அரசின் தூய்மைப் பள்ளி விருது பெற்றுள்ளோம். இங்கு படித்த மாணவர்கள் நல்லொழுக்கத்துடன் திறமையானவர்களாகவும் வெளியேறுகின்றனர். இதனால், பெற்றோர்கள் வெளியூரில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்புவதை நிறுத்திவிட்டு அரசு பள்ளியில் சேர்க்க முன்வருகின்றனர் என்றார்.