Published : 04 Nov 2019 08:41 AM
Last Updated : 04 Nov 2019 08:41 AM
புதுடெல்லி
கணக்கில் காட்டாமல் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு பொது மன்னிப்பு கொடுப்பதற்கான எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களிடம் இருக்கும் கணக்கில் வராத தங்கத்தை மதிப்பீடு செய்ய, தங்க பொது மன்னிப்பு திட்டத்தை விரைவில் அரசு அறிவிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின. இந்த திட்டம் மூலம், பதுக்கி வைக்கப்பட்ட பணத்தை தங்கத்தில் முதலீடு செய்யலாம். அவ்வாறு முதலீடு செய்யும்போது, தங்கத்துக்கான முழுவரியையும் செலுத்தி, வரி செலுத்தப்பட்ட தங்கமாக வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல், ரசீது இல்லாமல் இருக்கும் மூதாதையர் தங்கத்துக்கும் வரி செலுத்தி முறையான தங்கமாக மாற்றிக் கொள்ளலாம் என்று தகவல்கள் பரவின. இதன்மூலம் கிடைக்கும் வரிப்பணத்தை பிரதான் மந்திரி கரிப் கல்யான் யோஜனா திட்டத்துக்கு பயன்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகின.
ஆனால், தங்க பொது மன்னிப்பு திட்டம் போன்ற எந்த திட்டமும் இல்லை என்று மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது.
இதுகுறித்து அரசு தரப்பு வட்டாரங்கள் கூறுகையில், “பட்ஜெட் செயல்முறை நடந்துக் கொண்டு இருக்கும்போது, இதுபோன்ற செய்தி
கள் வெளியாவது வாடிக்கையாக நடந்து வருகிறது. கருப்புப் பணத்தை கண்டுபிடிக்க இதுபோன்ற எந்த திட்டத்தையும் வருமான வரித்துறை பரிசீலனை செய்யவில்லை” என்று தெரிவித்தன.
இந்தியர்களிடம் சுமார் 20,000 டன் தங்கம் உள்ளது. ஆனால், கணக்கில் வராத தங்கம் மற்றும் மூதாதையரிடம் இருந்து பெறப்பட்ட தங்கம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால், 25,000 முதல் 30,000 டன் வரை இருக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
கறுப்பு பணத்தை ஒழிக்கும் முயற்சியில், 2016-ம் ஆண்டு ரூ.500, ரூ.1000 நோட்டுக்களை மத்திய அரசு திரும்பபெற்றது. அதில் 99.3 சதவீதம், அதாவது ரூ.15.41 லட்சம் கோடியில், ரூ.15.31 லட்சம் கோடி அரசுக்கு திரும்பியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT