Published : 25 Oct 2019 11:46 AM
Last Updated : 25 Oct 2019 11:46 AM
புதுடெல்லி
பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவரிடம் புத்தகம், சீருடைக்கு வசூலித்த ரூ.4,442 ஐ, டெல்லி தனியார் பள்ளி திருப்பி அளித்துள்ளது.
தனியார் பள்ளிகள், பொருளாதாரத்தில் நலிவுற்ற மாணவர்களின் புத்தகம், சீருடைக்கு வசூலித்த கட்டணத்தைத் திருப்பித் தர வேண்டும் என்று டெல்லி குழந்தை உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக குழந்தை உரிமைகள் ஆணையம் கூறியுள்ளதாவது:
டெல்லியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் மாணவரின் தந்தை எங்களிடம் புகார் அளித்தார். அதில், குறிப்பிட்ட பள்ளியில் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் பிரிவில் தன்னுடைய மகன் ஒன்றாம் வகுப்பு படித்து வருவதாகவும், அவரிடம் இருந்து புத்தகங்களுக்கும் சீருடைக்கும் பள்ளளி கட்டணம் வசூலிக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
அவரின் புகாரை அடிப்படையாகக் கொண்டு, அந்தப் பள்ளிக்கு ஆணையம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அரசு விதிமுறைகளின்படி, தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் நலிவுற்றோர் மற்றும் பின் தங்கிய பிரிவினருக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு உண்டு. அவர்களுக்கு தொடக்கக் கல்வி வரை, இலவச மற்றும் கட்டாயக் கல்வி அளிக்கப்பட வேண்டும்.
இவ்வாறு கட்டணம் வசூலிப்பது அனைவருக்கும் கல்வி சட்டத்தையும் மீறுவதாகும். இதனால் ஆணையத்தின் உத்தரவுக்கு இணங்க, சம்பந்தப்பட்ட பள்ளி வசூலித்த சீருடை மற்றும் புத்தகங்களுக்கான தொகை ரூ.4,442-ஐத் திருப்பித் தந்துவிட்டது. இது அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் பொருந்தும்.
இவ்வாறு ஆணையம் தெரிவித்துள்ளது.
பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT