Published : 24 Oct 2019 05:45 PM
Last Updated : 24 Oct 2019 05:45 PM
மாணவர்கள் மீதான அன்பாலும் அக்கறையாலும் அர்ப்பணிப்புடன் தனித்துவமாக கற்பிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நல்லடையாள அணிவகுப்புத் தொடர் அன்பாசிரியர். இதில் அன்பாசிரியர் 41: கனகசபை- அரசுப் பள்ளியை பசுமைத் தோட்டமாக மாற்றிய இயற்கை ஆர்வலர்! என்ற பகுதி வெளியானது.
இதில் அறிவியல் ஆய்வகம் அமைக்கவும், கணினி அறை அமைக்கவும் நிதி உதவி தேவைப்படுவதாக அன்பாசிரியர் கனகசபை தெரிவித்திருந்தார். இந்நிலையில் 'இந்து தமிழ்' வாசகர்கள் இணைய வசதிகளுடன் கூடிய கணினி அறை, அறிவியல் ஆய்வகம், ஏசி வசதியோடு கூடிய ஸ்மார்ட் வகுப்பறை ஆகியவற்றை உருவாக்க உதவியுள்ளனர்.
இதுதொடர்பாக மகிழ்வுடன் பேசிய அன்பாசிரியர் கனகசபை, ''எங்களின் தேவைகளை அறிந்து உதவிய 'இந்து தமிழ்' வாசகர்களுக்கு நன்றி. தன்னார்வலர்களின் உதவியோடு மேலும் சில வசதிகளும் பள்ளியில் செய்யப்பட்டுள்ளன. 'சத்யசாய் அறக்கட்டளை' ரூ.73 ஆயிரம் மதிப்பில், ஏசி வசதி செய்து கொடுத்துள்ளது.
முன்னாள் மாணவர்கள் கொடுத்த ரூ.60 ஆயிரம் பங்களிப்போடு, ரூ.80 ஆயிரம் மதிப்பில் விழா அரங்க மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஓஎன்ஜிசி சார்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, ரூ.45 ஆயிரம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 'உதவும் உள்ளங்கள்' அறக்கட்டளை மூலம் 2.36 லட்சம் மதிப்பில், பெண்கள் கழிப்பறையைக் கட்டியுள்ளோம். கஜா புயலில் பாதிக்கப்பட்ட காய்கறித்தோட்டம், மூலிகைத் தோட்டங்களை ரூ.30 ஆயிரம் செலவில் புனரமைத்துள்ளோம்.
பள்ளி மானியத்தின் உதவியோடு சிசிடிவி கேமராக்கள் வைக்கப்பட்டுள்ளன. நண்பர் ஒருவர் பள்ளிக்குத் தொலைக்காட்சியைப் பரிசாக வழங்கியுள்ளார். இத்தனை வேலைகளை முடித்துவிட்டாலும் கணினி அறை, ஸ்மார்ட் வகுப்பறைகளுக்கு கூரையும் கண்ணாடிக் கதவும் அமைக்க வேண்டியுள்ளது.
மாணவிகள் கழிப்பறையைப் போல மாணவர்களுக்கும் கழிப்பறை கட்ட நிதி தேவைப்படுகிறது. கூடுதல் வகுப்பறைகளும் அமைக்க வேண்டியுள்ளது. உதவும் கரங்களுக்காகக் காத்திருக்கிறோம்'' என்கிறார் அன்பாசிரியர் கனகசபை.
அன்பாசிரியர் கனகசபை, தொலைபேசி எண்- 9751140627
க.சே.ரமணி பிரபா தேவி, தொடர்புக்கு: ramaniprabhadevi.s@hindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT