Published : 16 Oct 2019 05:15 PM
Last Updated : 16 Oct 2019 05:15 PM
பிலிபித்
இஸ்லாமிய அறிஞரின் பாடலை பள்ளி மாணவர்களைக் கொண்டு பாட வைத்த தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். உத்தரப் பிரதேசத்தின் பிலிபித் பகுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளியில் இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
'சாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா' என்னும் புகழ்பெற்ற வரிகளை எழுதியவர் அல்லாமா இக்பால் எனப்படும் முகம்மது இக்பால். பாகிஸ்தானியக் கவிஞரும் அரசியல்வாதியுமான இக்பால், 1902-ல் 'லப் பே ஹாத்தி ஹே துவா' என்னும் பாடலை எழுதியிருந்தார்.
இந்தப் பாடலை பள்ளியின் தலைமை ஆசிரியரான ஃபர்கான் அலி (45), தனது மாணவர்களைக் கொண்டு காலை வழிபாட்டு வேளையில் பாட வைத்தார். இதை அறிந்த உள்ளூர் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தலைவர்கள் புகார் அளித்தனர். இதனையடுத்து, தலைமை ஆசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதுகுறித்த விசாரணையில், இந்தப் பாடலை தினந்தோறும் பள்ளி மாணவர்கள் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் பாடி வந்தது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து பிலிபித் மாவட்ட மேஜிஸ்திரேட் கூறும்போது, ''சம்பந்தப்பட்ட ஆசிரியர், தனது மாணவர்களை தேசிய கீதத்தைத்தான் பாட வைத்திருக்க வேண்டும். வேறு பாடலைக் கற்பிக்க அவர் விரும்பி இருந்தால், முறையான அனுமதி பெற்றிருக்க வேண்டும். தேசிய கீதத்தை விடுத்து, வேறு பாடலைப் பாட வைத்தது தவறு'' என்று தெரிவித்துள்ளார்.
ஆனால், தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த தலைமை அசிரியர் ஃபர்கான் அலி, ''மாணவர்கள் தினந்தோறும் தேசிய கீதத்தைப் பாடுவர். இக்பாலின் இந்தப் பாடல், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களின் உருது பாடத் திட்டத்தில் இருக்கிறது. அரசு பாடத் திட்டத்தில் உள்ள பாடலையே பாட வைத்தேன்'' என்று தெரிவித்தார்.
விஎச்பி மாவட்ட தலைவர் அம்பரிஷ் மிஸ்ரா இதுகுறித்துக் கூறும்போது, ''ஓர் அரசு தொடக்கப் பள்ளியில் மதராஸா வகை வழிபாட்டை நடத்தியதை நாங்கள் எதிர்க்கிறோம்'' என்றார்.
ஐஏஎன்எஸ்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT