Published : 14 Oct 2019 08:40 AM
Last Updated : 14 Oct 2019 08:40 AM

டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு தூய்மை தூதுவர்களாக பள்ளி மாணவர்கள் நியமனம்

திருநெல்வேலி

டெங்கு காய்ச்சலைத் தடுக்க பள்ளி மாணவர்களை தூய்மைத் தூதுவர்களாக நியமித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் ஷில்பாபிரபாகர் சதீஷ் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெங்கு தடுப்பு பணிகள் குறித்த அனைத்துத் துறை அலுவலர்கள் பங்கேற்ற ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் திருநெல்வேலியில் நடைபெற்றது. இதில், ஆட்சியர் ஷில்பா பேசியதாவது:

பள்ளி வளாகங்களுக்கு உள்ளேயும், வெளிப்புறத்திலும் கொசுப் புழுக்கள் உற்பத்தி இல்லாதவாறு, பள்ளி நிர்வாகங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும். இதற்காக ஆசிரியர் ஒருவரை பொறுப்பு அலுவலராக ஒவ்வொரு பள்ளியும் நியமித்து, தினமும் கண்காணிக்க வேண்டும்.

டெங்கு பாதிப்பு இல்லாத மாவட்டம்

பள்ளி மாணவர்களை தூய்மைத்தூதுவராக நியமித்து, பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். விடுதி மாணவர் களுக்கு காய்ச்சல் இருந்தால் சுகாதாரத் துறைக்கு உடன் தகவல் தெரிவிக்க வேண்டும். அனைத்து துறையினரும் ஒன்றிணைந்து செயல்பட்டு டெங்கு பாதிப்பு இல்லாத மாவட்டமாக திருநெல்வேலி மாவட்டத்தை மாற்ற வேண்டும், என்றார் ஆட்சியர்.

பங்கேற்றவர்கள்

நிகழ்ச்சியில் திருநெல்வேலி மாநகராட்சி ஆணையர் விஜயலெட்சுமி, அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் கண்ணன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர்.பூபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x