Published : 14 Oct 2019 08:34 AM
Last Updated : 14 Oct 2019 08:34 AM

மதுரையில் ‘டாப் ஸ்டூடன்ஸ் கிளாஸ்’ நீட், ஜேஇஇ தேர்வில் மாநகராட்சி பள்ளி மாணவர்கள் சாதிக்க திட்டம்

மதுரை

மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர் விலும், பொறியியல் படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத்தேர்விலும் மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் சாதனை ஏற்படுத்தும் வகையில் தமிழகத்திலே முதல் முறையாக மதுரை மாநகராட்சியில் ‘டாப் ஸ்டூடன்ஸ் கிளாஸ்’ என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சி நிர்வாகத்தின் கீழ் 15 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. பிளஸ்-2 முடிந்ததும் உயர் கல்வி படிக்க தேசிய அளவில் பல்வேறு நுழைவுத் தேர்வுகள் வந்துள்ளன.

இதில் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வும், பொறியியலுக்கு ஜே.இ.இ நுழைவுத்தேர்வும் பிளஸ்-2 முடிக்கும் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் முக்கிய தேர்வுகளாகக் கருதப்படுகின்றன. இத்தேர்வுகளில் பெரும்பாலும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களே சாதிக்கின்றனர். மாநகராட்சி பள்ளி மாணவர்
களுக்கு வழிகாட்டுதல், நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி இல்லாமல் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், பொறியியல் படிப்புகளிலும் சேர முடியாமல் தவித்தனர்.

இந்நிலையில் மாநகராட்சி பள்ளிகளில் சிறப்பாகப் படிக்கும் மாணவர்களுடைய மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பு கனவை நனவாக்கும் வகையில் ‘டாப் ஸ்டூடன்ஸ்கிளாஸ்’ என்ற புதிய திட்டம் நடப்பு கல்விஆண்டு முதல் மதுரையில் தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் எஸ்.விசாசகன் கூறியதாவது:

மாநகராட்சி பள்ளிகளிலும் சிறந்த மாணவர்கள் படிக்கின்றனர். அவர் களுக்கும் மருத்துவராகும், பொறியாளராகும் கனவு உள்ளது. ஆனால், அவர்கள் வெவ்வெறு மாநகராட்சிப் பள்ளிகளில் படிப்பதால் அவர்களுக்கு ஒரு பொதுவான வழிகாட்டுதல், சிறப்பு வகுப்புகள், தேசிய நுழைவுத் தேர்வுக்கான பயிற்சி வழங்க முடியவில்லை.

அதனால், 15 மாநகராட்சிப் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் ஒவ்வொரு வகுப்பிலும் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களை ஒருங்கிணைத்து ‘டாப் கிளாஸ் ஸ்டூடன்ஸ்’ என்ற திட்டத்தை மாநகராட்சி நிர்வாகம் தற்போது உருவாக்கி உள்ளது.

அவர்களுக்கு தெற்கு வெளி வீதியில் உள்ள மாநகராட்சி அவ்வையார் மேல்நிலைப் பள்ளியில் சிறந்த ஆசிரியர்களைக் கொண்டு தினமும் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. அதேபோல் பிளஸ்-1 வகுப்பில் இருந்தே ‘நீட்’, ஜேஇஇ நுழைவு தேர்வுகளுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

மாணவர்களுக்கு ஏசி, வைஃபை, இன்டர்நெட், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட வசதிகளுடன் மற்ற மாநகராட்சி பள்ளிகளுக்கு இந்த ‘டாப் ஸ்டூடன்ஸ் கிளாஸ்’ வகுப்பறை முன்மாதிரி வகுப்பறையாகத் திகழும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தனியார் பள்ளிகளைப் போல் மாநகராட்சிப் பள்ளி மாணவர்களும் இனி அதிக எண்ணிக்கையில் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு இந்த திட்டம் பெரிதும் உதவும். சிறந்த மாணவர்கள், ஒரே வகுப்பறையில் இடம் பெற்றுள்ளதால் அவர்களிடையே யார் அதிக மதிப்பெண் எடுப்பது என்பதில் ஆரோக்கியமான போட்டி ஏற்படும். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சிறப்புத் தேர்வுகள் நடத்தி, அவர்களை மாநில அளவில் அதிக மதிப்பெண் எடுக்க வைக்க பிரத்தியேக வழிகாட்டுதல், பயிற்சிகள் வழங்கப்படும் என்றார்.

- ஒய். ஆண்டனி செல்வராஜ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x