Published : 09 Oct 2019 09:50 AM
Last Updated : 09 Oct 2019 09:50 AM
ஹின்டன்
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோட்டில் தாக்கு தல் நடத்திய விமானப் படையின் இரு படைப் பிரிவுகளுக்கு விமானப் படை தினமான நேற்று விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இந்தியாவில் விமானப் படை கடந்த 1932-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி உருவாக்கப்பட்டது. விமானப் படையின் 87-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது. உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் அருகில் உள்ள ஹின்டன் விமானப் படைத் தளத்தில் நடந்த அணிவகுப்பு மரியாதையை விமானப் படைத் தலைவர் ஏர் மார்ஷல் பதூரியாஏற்றுக் கொண்டார்.
அதைத் தொடர்ந்து விமானங்களின் வான் சாகசங்கள் நடந்தன. சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கும், படைப் பிரிவுகளுக்கும் விருதுகள், பரிசுகள் வழங்கப்பட்டன. பாலகோட் பகுதியில் தீவிரவாதிகளின் முகாம்கள் மீதான தாக்குதலில் பாகிஸ்தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்திய விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான், மிக்-21 பைசன் படைப் பிரிவுக்குத் தலைமை தாங்கினார்.
அபிநந்தன் ஓட்டிய மிக்-21 பைசன் ரக விமானம்தான், அமெரிக்கத் தயாரிப்பான பாகிஸ் தானின் எப்-16 விமானத்தை சுட்டு வீழ்த்தியது. அதன்பின் அதே மிக்-21 பைசன் ரக விமானத்தை வானில் செலுத்தி சாகசங்களும் செய்தார். மூன்று மிராஜ்-2000 விமானங்கள், இரு எம்கேஐ விமானம் ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மிராஜ் விமானங்களை இயக்கிய வீரர்கள் புஜாதே, கேப்டன் பி.ராய், கமாண்டர் பசோட்டா, சுகோய் 30 விமானங்களை இயக்கிய பைலட் கே.பி.சிங், பரசுராம் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
பாலகோட் தாக்குதலில் தீவிரவாதிகள் முகாமை அழித்த அபிநந்தனின் நம்பர் 51 படைப் பிரிவு, நம்பர் 9 படைப் பிரிவு ஆகியவை சிறப்பாக அலங்கரிக்கப்பட்டன. பாலகோட் தாக்குதலில் ஈடுபட்ட விமானப் படை வீரர்கள், குறிப்பாக அபிநந்தன் தலைமையிலான படைப் பிரிவுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
- பிடிஐ
Sign up to receive our newsletter in your inbox every day!