Last Updated : 07 Oct, 2019 06:41 PM

 

Published : 07 Oct 2019 06:41 PM
Last Updated : 07 Oct 2019 06:41 PM

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 1,200 பேர் கல்விச் சுற்றுலாவுக்காக கேரளா பயணம்: விண்வெளி அறிவியல் பயிற்சி அளிக்கவும் கல்வித்துறை திட்டம்

சென்னை
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 1,200 பேர் கேரளாவுக்கு கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்படுகின்றனர். சுற்றுலாவில் ஆசிரியர்களுக்கு விண்வெளி அறிவியல் தொடர்பான பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித் துறையில் கற்றல், கற்பித்தல் பணிகளை மேம்படுத்த பல்வேறு விதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அடுத்த ஆண்டு முதல் மாணவர்களுக்கு ஸ்மார்ட் வகுப்பறைகள் மூலம் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் திட்டம் உயர்நிலை, மேல்நிலை வகுப்புகளில் நடைமுறைக்கு வரவுள்ளது. இதற்காக அரசுப்பள்ளி முதுநிலை ஆசிரியர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டன.

மேலும், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் 1,200 பேர் தற்போது கேரளாவுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின்கீழ் நடப்பு கல்வியாண்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் கணிதம், அறிவியல் பாட ஆசிரியர்களை கல்விச் சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் 6 பட்டதாரி மற்றும் 4 முதுநிலை ஆசிரியர்கள் என 10 பேர் வீதம் மொத்தமுள்ள 120 கல்வி மாவட்டங்களுக்கு 1,200 பேர் தேர்வாகியுள்ளனர். அதன்படி ஆசிரியர்கள் கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு கல்விச்சுற்றுலா செல்கின்றனர்.

மொத்தம் 4 நாட்கள் வரையான சுற்றுலாவில் தேசிய விண்வெளி ஆய்வு மையம், கணித தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள் ஆகிய இடங்களுக்கு ஆசிரியர்கள் நேரடியாக களப்பயணம் மேற்கொள்வார்கள்.மேலும், விண்வெளி ஆய்வு தொடர்பான சிறப்பு பயிற்சி வகுப்புகளும் வல்லுநர் குழுவால் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதன்மூலம் விண்வெளி அறிவியல் ஆர்வம் மாணவர்களிடம் ஊக்குவிக்கப்படும். ஆசிரியர்கள் பயிற்சியில் பெற்ற அனுபவம் மாணவர்களுக்கு சிறப்பான முறையில் கற்பித்தல் பணியை மேற்கொள்ள உதவும். மேலும், அறிவியல் செய்முறை கல்விக்கான முக்கியத்துவம் உயரவும் வழிவகுக்கும்.

இதுதவிர விண்வெளி ஆராய்ச்சி குறித்த மாணவர்களின் சிறந்த கேள்விகளை ஆசிரியர்கள் பெற்றுக் கொண்டு விஞ்ஞானிகளிடம் விளக்கம் பெற்று தரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த கல்விச் சுற்றுலா பயணம் மத்திய ரயில்வே துறையின் உதவியுடன் மேற்
கொள்ளப்பட உள்ளது. ஆசிரியர்கள் அனைவரும் ரயில் மூலமாகவே சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவர்.

இதற்காக ஒரு ஆசிரியருக்கு ரூ.2,000 என கணக்கிட்டு மொத்தம் ரூ.24 லட்சம் பயண நிதியாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், இதர பாடங்களின் ஆசிரியர்களையும் அவர்களின் பாடங்கள் சார்ந்த வரலாற்று இடங்கள், கல்வி நிறுவனங்கள், தொழிற்சாலைகளுக்கு விரைவில் கல்விச்சுற்றுலா அழைத்து செல்ல திட்டமிட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x