Last Updated : 07 Oct, 2019 06:10 PM

 

Published : 07 Oct 2019 06:10 PM
Last Updated : 07 Oct 2019 06:10 PM

கிராம மக்கள் உதவியுடன் அரசு பள்ளி மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட்’ வகுப்பறை

மதுரை

மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ளது கருப்பட்டி கிராமம். முழுவதும் விவசாயம் நிறைந்த பகுதி. இங்குள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அம்மச்சியாபுரம், கணேசபுரம், பொம்மன்பட்டி, பாலகிருஷ்ணாபுரம், இரும்பாடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 210-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

தலைமை ஆசிரியை பிரேமாதேவி உட்பட 12 ஆசிரிய, ஆசிரியைகள் பணிபுரிகின்றனர். இப்பள்ளி மாணவர்களுக்கு தனியாருக்கு இணையான கல்விச் சூழலை ஏற்படுத்த பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் திட்டமிட்டனர்.

முதல் கட்டமாக தனியார் பள்ளிகளில் இருப்பது போன்று ஆன்லைனில் பாடம் கற்பிக்கும் ‘ஸ்மார்ட்’ வகுப்பறைகளை உருவாக்க முடிவு செய்தனர். இதற்காக ஆசிரியர்கள், பெற்றோர்-ஆசிரியர் கழகத்தினர் கிராம முக்கிய பிரமுகர்களை சந்தித்து நன்கொடை வசூலித்தனர்.
கிராமத்தினர், ஆசிரியர்களின் பங்கீடு என ரூ. 70 ஆயிரம் நிதி திரட்டினர். இதன் மூலம் பெரிய அளவில் ஸ்மார்ட் வகுப்பறை ஒன்றை அண்மையில் ஏற்படுத்தினர். இதன் மூலம் 8, 9, 10 ஆகிய வகுப்புகளுக்கு சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கின்றனர்.

இது குறித்து தலைமை ஆசிரியை பிரேமாதேவி கூறியதாவது:
பெற்றோரிடம் தனியார் பள்ளி மோகம் அதிகரிக்கிறது. எங்களது பள்ளியில் தனியாருக்கு இணையாகக் கணினி வகுப்பறை ஏற்படுத்தினோம். அறிவியல், சமூக அறிவியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களை ஸ்மார்ட் திரையில் நடத்துகிறோம். இவ்வசதியால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது என்றார்.

பெற்றோர்-ஆசிரியர் கழகப் பொருளாளர் நைனா முகமது கூறியதாவது:
எங்கள் பள்ளி வளர்ச்சிக்கும், மாணவர் எண்ணிக்கை அதிகரிக்கவும் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் ஒத்துழைக்கின்றனர். பொதுமக்கள், ஆசிரியர்கள் பங்கீடு ரூ.70 ஆயிரத்தில் ஸ்மார்ட் வகுப்பறை அமைத்துள்ளோம். ஆந்திரா வங்கி மூலம் ரூ.30 ஆயிரத்துக்கு சேர், டேபிள், பீரோ வாங்கினோம். அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொடுத்தாலும், பள்ளி வளர்ச்சிக்கு கிராமத்தினர் ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.

ஆசிரியர் முருகன் கூறும்போது, ஸ்மார்ட் திரையால் செல்போன் மூலம் பாடமெடுக்கிறோம். யூ டியூப் உள்ளிட்ட ஆன்லைன் மூலம் கல்வி தொடர்பான பிற நிகழ்ச்சிகளையும் காண்பிக்கிறோம். இதுபோன்ற வசதியால் பெற்றோரும் தங்களை குழந்தைகள் இங்குசேர்க்க ஆர்வம் காட்டுகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x