

குழந்தைத் திருமணம் செய்துவைக்கப்பட இருந்த தனது தோழியை காப்பாற்றி இருக்கிறார் 13 வயது ஜார்கண்ட் மாநில சிறுமி. ஜார்கண்ட் மாநிலம் பர்சோடியாபர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு 22 வயதான ஆணுடன் திருமணம் முடித்து வைக்க அச்சிறுமியின் பெற்றோர் தீர்மானித்தனர். ஆனால், சிறுமிக்கோ படித்து முன்னேற வேண்டும் என்கிற கனவு உள்ளது. இதனை தனது தோழியிடம் சொல்லி, தன்னுடைய முகவரி உள்ளிட்ட முழு விவரத்தையும் அளித்து எப்படியேனும் காப்பாற்றும்படி மன்றாடி இருக்கிறார்.
குழந்தை திருமணத்தில் இருந்து சிறுமியை மீட்க சைல்ட் ஹெல்ப்லைன் 1098 எண்ணுக்கு அழைத்து புகார் அளித்தார் சிறுமியின் தோழி. அருகில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து விரைந்து வந்த போலீஸார் நடக்கவிருந்த குழந்தை திருமணத்தை தடுத்து நிறுத்தி சிறுமியை குழந்தை நல பாதுகாப்பு கமிட்டியிடம் ஒப்படைத்தனர். பிறகு கோடர்மா நகரத்தில் உள்ள கஸ்தூரிபா காந்தி உறைவிட பள்ளியில் சிறுமி சேர்க்கப்பட்டுள்ளார்.
தமிழகத்திலும் கரோனா காலத்தில் பல பெற்றோர் பள்ளி சென்று கொண்டிருந்த தங்கள் குழந்தைகளுக்குத் திருமணம் நடத்தியுள்ளனர். இதுவரை எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின்படி தமிழகத்தில் பள்ளி செல்லும் 511 மாணவிகளுக்குக் கடந்த இரண்டாண்டுகளில் திருமணம் நடந்துள்ளது. இடைநிற்றல் அதிகரிக்க இதுவும் ஒரு காரணம். இனிவரும் காலத்தில்குழந்தைத் திருமணம் நிகழ்வது எங்கேனும் தெரியவந்தால் நீங்களும் துணிந்து புகார் அளியுங்கள் மாணவர்களே!