

அறிவியல் புத்தகம் எழுதிய இளம் சாதனையாளர் என்ற பட்டத்துடன் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம் பிடித்திருக்கிறார் இந்தியாவின் 12 வயது சிறுவன் ஆயுஷ்மான் கலிதா.
சிறுகதை, கவிதை போன்ற புனைவு புத்தகங்களை இளம் வயதில் எழுதியவர்கள் பலருண்டு. ஆனால், புனைவு அல்லாத அறிவியல் ஆராய்ச்சி சார்ந்து ‘Black Holes in a Nutshell: The Hungry Matter no one can escape’ என்ற புத்தகத்தை ஆயுஷ்மான் எழுதியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இவர் 7-ம் வகுப்புபடிக்கும் மாணவர். அறிவியல் கருதுகோள்களில் மிகவும் கடினமானதாகக் கருதப்படும் கருந்துளைகள் குறித்துஆராய்ந்து தம் சக வயது மாணவர்களுக்கு எளிதில் புரியும்படியாக இப்புத்தகத்தை எழுதியுள்ளார்.
கருந்துளைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சு குறித்த ஆய்வு புத்தகங்களை எழுதி இயற்பியல் துறையில் உலகப்புகழ் பெற்றவர் ஸ்டீபன் ஹாகிங். இவரது நூல்களை சிறுவயதிலேயே ஊன்றி வாசித்துள்ளார் ஆயுஷ்மான். இவ்வாறு அறிவியல் மீது தனக்கு ஏற்பட்ட ஆர்வத்தில் கரோனா பெருந்தொற்று காலத்தில் இப்புத்தகத்தை எழுதியுள்ளார். ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து பள்ளிக்கூடம் நடைபெறாத கால அவகாசத்தைப் பயனுள்ளதாக மாற்ற நினைத்ததன் விளைவே தனது புத்தகம் என்கிறார்.
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்பதுபோல, கரோனா காலத்தில் நேரத்தை விரயம் செய்யாமல் இந்த சிறுவன் தன்னையும் தன்னை சார்ந்தவர்களையும் அடுத்த கட்டத்துக்கு உயர்த்த முயன்றுள்ளது நிச்சயம் மிகப் பெரிய சாதனைதான்.