

ஆன்லைன் விளையாட்டு வன்முறை காட்சிகள் குழந்தைகள் மனதை பெரிதும் பாதிக்கின்றன என்று மதுரை உயர் நீதிமன்ற நீதிபதிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
நாகர்கோவிலை சேர்ந்த பெண் ஒருவர் கல்லூரியில் படித்து தனது மகளை காணவில்லை என்று அண்மையில் மதுரை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் மேலும் குறிப்பிட்டிருந்த சில தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியவை. தடை செய்யப்பட்ட பப்ஜி, ஃப்ரீ ஃபயர் போன்ற ஆன்லைன் விளையாட்டுகளை தனது மகள் தீவிரமாக விளையாடி வந்ததாகவும், அதன் மூலம் அவருக்கு ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும், அந்த நபர்தான் தனது மகளை கடத்திவிட்டதாகவும் குறிப்பிட்டிருந்தார் அந்த தாய். பிறகு காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு நீதிமன்றத்தில் அந்த மாணவி ஆஜர் செய்யப்பட்டிருக்கிறார்.
இதுதொடர்பாக நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது தடைசெய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகள் வெவ்வேறு பெயர்களில் வந்து கொண்டே இருப்பது குறித்தும், அவற்றால் இளையோர் மனதளவில் கடுமையாகப் பாதிக்கப்படுவது குறித்தும் நீதிபதிகள் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர். இதே கூற்று கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு தரப்பினரால் வலியுறுத்தப்பட்டு வருகிறது. அதிலும் ப்ளுவேல் சேலஞ் போன்ற விபரீதமான ஆன்லைன் விளையாட்டுகள் அவற்றை விளையாடிப் பார்த்த இளையோரை தற்கொலைக்கு தூண்டிய கொடூரத்தை யாராலும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. இத்தகைய ஆபத்தான ஆன்லைன் விளையாட்டுகள் நமது குழந்தைகளை அண்டாமல் அரசு கடும் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.