

தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு அரசு பள்ளியிலும் 4 ஆண்டுகளில் ரூ.150 கோடி செலவில் தலா ஒரு ஸ்மார்ட் வகுப்பறை உருவாக்கப்படும், ரூ.171 கோடி மதிப்பீட்டில் 25 மாநகராட்சிகள் மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவித்துள்ளார்.
சில மாதங்களுக்கு முன்பு டெல்லி அரசு பள்ளிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் அவற்றை கண்டு பிரமித்தார். தமிழகத்திலும் அதேபோன்று மாதிரி பள்ளிகளையும், தகைசால் பள்ளிகளையும் உருவாக்க முடிவெடுத்தார்.
அதன்படி மாவட்டம் தோறும் அரசு பள்ளிகளுடைய கட்டிடங்கள் நவீனமயமாக்கப்படும், கற்றல் செயல்பாடுகளுடன் சேர்த்து பல்துறை திறமைகளும் மாணவர்களுக்கு உருவாக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
நிச்சயமாக தமிழக கல்விச்சூழலுக்கு இது நம்பிக்கை அளிக்கும் திட்டமாகும். ஆனால், இதெல்லாம் சாத்தியப்பட தேவையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளதா? முதல்வரை வியக்க வைத்த டெல்லி அரசு பள்ளிகளும் சில ஆண்டுகளுக்கு முன்புவரை பாழடைந்த நிலையில்தான் இருந்தன.
இன்று அவை முன்மாதிரி பள்ளிகளாக மிளிர முக்கியக் காரணம் டெல்லி அரசு கடந்த ஆறு ஆண்டுகளுகளாக மாநில பட்ஜெட்டில் 26% வரை நிதியை கல்விக்கு ஒதுக்கியது.
அவற்றை முறையாக செலவழித்தும் வந்தது. இந்த ஆண்டு டெல்லி அரசு 22% நிதியை கல்விக்கென ஒதுக்கியிருக்கும்போது தமிழகமோ 13.4 % மட்டுமே ஒதுக்கியுள்ளது. இது குறைவுதான் என்றாலும் குறைந்தபட்சம் இந்த நிதி முழுவதும் கல்வி வளர்ச்சிக்கும் மறுமலர்ச்சிக்கும் முறையாக செலவிடப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.