

ஈரோடு
புன்செய் புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ‘வாட்டர் பெல்' திட்டம் தொடங்கப்பட்டது.
தமிழகத்தில், அனைத்துப் பள்ளிகளிலும் மாணவ, மாணவிகள் பாட வேளை முடிந்தவுடன், தண்ணீர் அருந்துவதற்கு, 10 நிமிடம் இடை
வேளை விட வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியது.
இதனை அடுத்து ஈரோடு புன்செய்புளியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ, மாணவிகள் போதிய அளவுக்கு தண்ணீர் அருந்துவதை உறுதி செய்யும் வகையில் ‘வாட்டர் பெல்’ திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
மூன்று முறை ஒலிக்கப்படும்
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் முத்து கூறும்போது, “ஒரு நாளைக்கு மூன்று முறை வாட்டர் பெல் ஒலிக்கப்படும். அந்த நேரத்தில் மாணவ, மாணவிகள் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவர். காலை இறை வணக்கம் முடிந்த பின்னர் வரும் இடைவேளையில் 11 மணிக்கு ஒரு முறையும், மதியம் 12.30 மற்றும் மாலை 3 மணிக்கும் இடைவேளை விடப்படுகிறது. இதில் குழந்தைகள் ஓன்றாக வந்து, ஓரிடத்தில் நின்று தண்ணீர் குடிக்கின்றனர்.
தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் கொண்டுவராத குழந்தைகளுக்கு தண்ணீர் ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது. குழந்தைகள் ஆர்வத்துடன், தண்ணீர் அருந்தினர். இதனை குழந்தைகள் தொடர்ந்து பின்பற்றுவார்கள் எனவும் , தண்ணீர் அருந்துவதால் மாணவர்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளனர்” என்று தெரிவித்தார்.