Published : 15 Nov 2019 12:50 PM
Last Updated : 15 Nov 2019 12:50 PM

இணையத்தோடு பயனுள்ள வகையில் இணைவோம்!

இன்றைய காலம் டிஜிட்டல் யுகம் என்றழைக்கப்படுகிறது. இதில் வாழும் இளையோர், ‘டிஜிட்டல் நேட்டிவ்ஸ்’ அதாவது டிஜிட்டலுக்கு பழக்கப்பட்டவர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். அந்த அளவுக்கு அன்றாட வாழ்க்கையில் பிரித்துப் பார்க்க முடியாத ஒன்றாக இணையம், ஸ்மார்ட்போன் போன்ற டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மாறிவிட்டன.

இப்படி இருக்க, நாணயத்தின் மறு பக்கமாக ஸ்மார்ஃபோன் பயன்பாடும், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் நேரம் செலவழிப்பதும் மாணவர்களை சீரழித்து வருகிறது என்ற கவலையும் எதிரொலித்து கொண்டே இருக்கிறது.

இந்த இரண்டு எதிர் துருவங்களுக்கு இடையில் உள்ள சண்டை சச்சரவு எப்போது தீரும்? அது தானாக தீராது. நாம் தான் அதற்கான தீர்வை கண்டுபிடிக்க வேண்டும்.

முதலாவதாக, வயது முதிர்ந்தவர்கள் புரிந்துகொண்டு ஒப்புக் கொள்ள வேண்டி ஒரு உண்மை இருக்கிறது. அது, இன்றைய சூழ்நிலையில் இணைய பயன்பாடு என்பது இன்றியமையாதது என்பதுதான். வளரிளம் பருவத்தினர் இணையத்தை பயன்படுத்துவதில் தவறில்லை.

ஆனால், பயனளிக்கும் விதத்தில் அவர்கள் அதில் நேரம் செலவிட வேண்டும். அதற்கு ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பும் குறைந்தபட்ச கண்காணிப்பும் தேவை.

பள்ளி பாடங்களை சுவாரசியமானதாகவும் எளிமையானதாகவும் மாற்றக்கூடிய எத்தனையோ யூடியூப் காணொலிகள் இணையத்தில் கொட்டிக் கிடக்கின்றன. இவற்றின் மூலம் மாணவர்கள் பயனடையலாம். அதே நேரம் பாடபுத்தகங்களை புறந்தள்ளி விட்டு அவற்றில் மூழ்கிப் போய்விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அடுத்தபடியாக பொது அறிவு தொடர்பான தகவல்கள், செய்திகள் ஆகியவை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணையம் கைகொடுக்கும்.

ஆனால், 13-வயதுக்கு மேற்பட்டவர்கள் ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்த தொடங்கும் முன்னர் அதில் தனிப்பட்ட தகவல்களையும் புகைப்படங்களையும் பகிர்வது அபாயகரமானது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். இப்படி கவனத்துடன் பயன்படுத்தினால் இணையத்தோடு பயனுள்ள வகையில்
இணையலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x