நம்பிக்கை நட்சத்திரம் ஆகலாம்
பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனமான எச்.சி.எல்.-ன் நிறுவனரான ஷிவ் நாடார் அரசு பள்ளியில் படித்தவரே என்று மாணவர்களுக்குத் தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
மதுரையில் நேற்று முதன் தினம் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தின் தொடக்க விழா நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக ஷிவ் நாடாரும் அவரது மகள் ரோஷினியும் அழைக்கப்பட்டிருந்தனர். தமிழக அரசு பள்ளி மாணவர், மாணவியர் காண வேண்டும் என்பதற்காகத்தான் அவர்களை அழைத்து வந்ததாக முதல்வர் கூட்டத்தில் தெரிவித்தார். ஏனெனில் 50 நாடுகளில் 2 லட்சம் பேர் பணிபுரிந்து வரும் அளவிற்கு வளர்ந்திருக்கும் எச்.சி.எல். நிறுவனத்தினுடைய நிறுவனரான ஷிவ் நாடாரும் அரசு பள்ளியில் படித்தவரே.
கிராமத்தில் பிறந்து, மாநகராட்சி பள்ளியில் படித்து, மிகச்சிறிய நிறுவனத்தை சுயமாக முயன்று தொடங்கி இன்று உலக புகழ்பெற்றவராக உயர்ந்தெழுந்திருக்கிறார். தான் வளர்ந்ததோடு திருப்தி அடைந்துவிடாமல் பல கிராமங்களை தத்தெடுத்து உதவிகள் பல செய்து வருகிறார். இந்தியத் தொழிலதிபர்களில் அதிகமான தொகையை நன்கொடையாக வழங்கி வருபவர் என்ற பாராட்டையும் பெற்றிருக்கிறார்.
பின்தங்கிய சூழலிலிருந்து வருவதாகவும், கிராமத்தில் உள்ளதாகவும், அரசு பள்ளியில் படிக்கும் நிலையில் இருப்பதாகவும் வருந்தக் கூடிய மாணவர்கள் உங்களில் பலர் இருக்கக் கூடும். இவற்றில் எதுவுமே உங்களுடைய வளர்ச்சிக்குத் தடையன்று என்பதை மனப்பூர்வமாக நம்புங்கள். உங்களுடைய ஆற்றல் ஏதுவென்பதைக் கண்டறிந்து அதன் மீதும் உங்கள் மீதும் முழு நம்பிக்கை வையுங்கள். எதிர்காலத்தில் உலகத்திற்கே நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுப்பீர்கள்.
