

2023-ம் ஆண்டு பிறந்துவிட்டது. விதவிதமான இலக்குகளை ஒவ்வொருவரும் நிர்ணயித்திருப்பீர்கள். இதுபோன்ற புத்தாண்டு இலக்குகளை கேலி செய்யும் மீம்ஸ் சமூக ஊடகங்களில் வலம் வருவதை கவனித்தீர்களா?
புத்தாண்டில் உடற்பயிற்சி செய்வதென்று சபதம் எடுத்து, ஜனவரி 1 அன்று அரக்கப்பறக்க விடியற்காலையில் விழித்து உடற்பயிற்சி மேற்கொள்கிறார் ஒரு ஆசாமி. அடுத்த சில நாட்களில் வேகமும் உத்வேகமும் குறைந்து பழையபடி படுத்து உறங்கிவிடுகிறார். வெறும் கேலியாக தோன்றினாலும் இதற்குப் பின்னால் உள்ள உண்மையை நுட்பமாக அலச வேண்டியுள்ளது. இலக்கை நிர்ணயித்த வேகத்தில் நாம் கைவிடுகிறோம் என்பதுதான் அது.
இலக்கு நபருக்கு நபர் மாறுபடலாம். பெரியவர்களுக்கு உடற்பயிற்சி என்றால், மாணவர்களில் சிலருக்கு ஆங்கில மொழித்திறனை மெருகேற்றுவதாக, கணித வாய்பாட்டில் அத்துப்படியாவதாக, புதிய கணினி மொழி அல்லது கலை அல்லது விளையாட்டை கற்றுத் தேறுவதாக இருக்கலாம். அவ்வளவு ஏன் ஒரு சிலருக்கு காலையில் தானாக விழித்தெழுந்து சுறுசுறுப்பாக பள்ளிக்கு கிளம்புவதாகக் கூட இருக்கலாம். இப்படி அவரவர் ஏற்கும் சபதத்தை எடுத்த எடுப்பில் கைவிடக் காரணம் பெரும்பாலும் சுயமாக மனமுவந்து ஏற்கும் இலக்காக அவை இருப்பதில்லை. நண்பர்கள், அக்கம்பக்கத்தினர், சக மாணவர்கள் செய்கிறார்கள் என்பதற்காக தனக்கு விருப்பமும், திறனும், சூழலும் சாதகமாக இருக்கிறதா, இல்லையா என்பதை பற்றி யோசிக்காமல் ஏற்கும் சபதம் வெல்ல வாய்ப்பில்லை. உங்களுக்கு பிடித்தமான அதேநேரத்தில் நிஜத்தில் எட்டக் கூடிய இலக்கை தீர்மானித்து எட்டிப் பிடியுங்கள்.