Published : 04 Nov 2022 06:07 AM
Last Updated : 04 Nov 2022 06:07 AM

காற்று மாசு அபாயம் | பள்ளிகள் மூடப்படும்: டெல்லிக்கு குழந்தைகள் ஆணையம் எச்சரிக்கை

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் காற்று மாசு அபாயகர அளவை எட்டியுள்ளது. காற்றில் நச்சுத்தன்மை உச்சத்தை எட்டியுள்ளதால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். இதே நிலை நீடித்தால் டெல்லி பள்ளிகளை மூட வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்று தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் மாநில அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நச்சுத்தன்மை நிறைந்த காற்றால் பாதிக்கப்பட்டுள்ள உலகின் 50 நகரங்களின் பட்டியலில் இந்தியாவின் 35 நகரங்கள்இடம்பெற்றுள்ளதாக சுவிட்சர்லாந்து நாட்டின் ‘ஐகியூ ஏர்’ அமைப்பு கடந்த மார்ச் மாதம் எச்சரித்திருந்தது. அதிலும் மிகமோசமாக பாதிக்கப்பட்ட தலைநகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம் வகிப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று டெல்லியில் காற்று மாசு அளவீடு செய்யப்பட்டதில், ‘மிகவும் மோசம்’ என பரிசோதனை முடிவுகள் தெரிவித்தன. இதனால்குழந்தைகளுக்கு மூச்சுத்திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது. ஆகவே,குழந்தைகள், முதியோர் மற்றும்நோயாளிகள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

இந்நிலையில், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் டெல்லி மாநில அரசின் தலைமைசெயலாளருக்கு நேற்று நோட்டீஸ் அனுப்பியது. அதில் கூறப்பட்டவை: காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு தவறிவிட்டது. காற்றில்நச்சுத்தன்மை உள்ளதால் குழந்தைகள் உயிரிழக்கும் அளவுக்கு அபாயம் உள்ளது. எனவே இதில் அலட்சியமாக இருக்க முடியாது. பள்ளி செல்லும் மாணவர்கள் மைதானம் மற்றும் வெட்டவெளியில் விளையாடுவதை அரசு உடனடியாக தடை செய்ய வேண்டும். காற்று மாசுபாட்டைத் தடுக்க அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து 24 மணிநேரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். டெல்லி அரசின் அலட்சியப் போக்கு நீடித்தால் பள்ளிகளை மூட உத்தரவிட நேரிடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x