Last Updated : 03 Nov, 2022 06:15 AM

 

Published : 03 Nov 2022 06:15 AM
Last Updated : 03 Nov 2022 06:15 AM

எங்கே போனது சிலேட்டும், பலப்ப குச்சியும்!

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்புவரை 1-ம், 2-ம் மற்றும் 3-ம் வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு எழுத உபயோகமாக இருந்தது சிலேட்டு எனலாம். சிலேட்டை பலகை என்றும் கூறுவார்கள். அதில்எழுத பயன்படும் குச்சியை பலப்பம் என்று அழைப் பார்கள். முதல் வகுப்பில் சேரும் குழந்தையிடம் பரப்பிய நெல்மணியில் அ ஆ போட வைப்பர்.

பள்ளிக்கு முதலில் வந்து சேரும் அந்நாள் ஒரு திருவிழா போலே நடக்கும். புத்தாடை உடுத்தி வீட்டில் உள்ள அனைத்து உறவினரும் சேர்ந்து குழந்தையை பள்ளிக்கு அழைத்துவருவர். ஆசிரியர் குழந்தையின் வயதை கேட்பார். 5 பூர்த்தியாகி விட்டது என்று கூறுவர். உடனேஆசிரியர் குழந்தையின் வலது கையை எடுத்துதலைக்குமேல் மடித்து இடது கையை தொடச் சொல்லுவார். சரிதான் என்று சொல்லி விழா நடந்தேரும். அன்று முதல் சிலேட்டில் உயிரெழுத்தை எழுத ஆரம்பித்து, படிப்படியாக அனைத்து பாடங்களும் எழுதிப் படிக்க தொடங்குவார்கள்.

சிலேட்டின் வகைகள்: அந்த காலத்தில் மாவு சிலேட்டு, அட்டை சிலேட்டு, தகர சிலேட்டு என மூன்று வகையான சிலேட்டுகள் விற்பனையில் இருந்தன. அதில் எழுத மாவு குச்சி பலப்பம், கட்டை பலப்பம் என இரண்டு வகையான குச்சிகள் பயன்படுத்தப்பட்டன. அட்டை சிலேட்டில் தண்ணீர் போட்டு துடைத்தால் அட்டை ஊறிப்போய் சிலேட்டு உப்பிவிடும். தகர சிலேட்டில் தண்ணீர் ஊற்றி துடைத்தால் தகர சிலேட்டு துருப்பிடித்துவிடும். பள்ளிக்கு வரத் தொடங்கும் குழந்தை சிலேட்டிலே எண்ணையும் எழுத்தையும் எழுதி, சொற்றொடர்களை எழுதப் பழகி, கணித வாய்ப்பாடுகள் எல்லாம் எழுதி தெரிந்து கொண்டார்கள். சிலேட்டில் மாவு பலகையே உசத்தியாகப் பார்க்கப்படும். ஆனால், கை தவறி கீழே விழுந்துவிட்டால் உடைந்துவிடும்.

அழியாத பாடம்: மாவு பலகையை கவனமாக வைத்துக் கொண்டு அதில் எழுதும் சக மாணவர்களைப் பார்த்து மற்ற மாணவர்கள் அதுபோல சிலேட்டு வேண்டும் என்று கேட்டு பெற்றோரிடம் அடம்பிடிக்கும் குழந்தைகளும் உண்டு. தண்ணீரில் பலப்ப குச்சியை ஈரம் செய்து சிலேட்டில் எழுதும் வகுப்புப்பாடம் அழியாது. அதை அப்படியே பையில்போட்டு வீட்டிற்கு எடுத்து வந்தாலும் அழியவே அழியாது. வகுப்பறையில் சிலேட்டை வைத்து படிப்பது, பிறகு வீட்டிற்கு எடுத்து வந்து அதே பாடத்தை வீட்டுப்பாடமாக எழுத வேண்டும். அந்த சிலேட்டில் ஒரு சிறு பாகத்தில் என் மகன், மகள் இன்று படித்தாள், படித்தான் என பெற்றோர் கையொப்பம் இட்டு அனுப்புவர். சிலேட்டு உபயோகம் 5-ம் வகுப்பு வரை தொடரும். பார்க்காமல் எழுதிப் பார்க்க வேண்டிய பாடங்களை அழித்து அழித்து மீண்டும் மீண்டும் எழுதிப் பார்க்கலாம்.

சிலேட்டை அழிப்பதற்கென்று சிறு பஞ்சு உபயோகிப்பர், கிராமத்தில் கோவக்காவின் இலையைப் போட்டு தேய்த்து எழுதியதை சுத்தம் செய்வர். அந்த கோவக்காவின் பச்சை வண்ண நிறம் சிலேட்டை மேலும் அழகாக்கும். கரும்பலகை முழுவதும் ஆசிரியர் வரும்முன் கோவக்காவின் இலைகளை எடுத்து வந்து சுத்தம் செய்து காய வைத்துவிடுவர். ஆசிரியர் வந்து கரும்பலகையில் எழுதி பாடம் எடுக்க தயாராக வைப்பார். அன்று, சிலேட்டு எனும் ஒற்றை கற்பிப்பான், அன்றைய மாணவ உலகையே ஆண்டது, சிறப்பையும் தந்தது. இன்று ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி நோட்டுகள் என்று வைத்துள்ளார்கள் மாணவர்கள். அதை சரியாக பராமரிக்க முடியாமல் எழுதி எழுதி கிழித்து வகுப்பறையில் காகிதங்களை உருண்டையாக்கி பந்து போல செய்துவிளையாடுகிறார்கள். வீட்டுப்பாடத்தை கேட்டாலும் எழுதி வீட்டில் வைத்து விட்டேன் டீச்சர் என்கிறார்கள். எங்கே போனது, சிலேட்டும் பலப்ப குச்சியும்! - கட்டுரையாளர்: பயிற்சி ஆசிரியை, காஞ்சிபுரம் கல்வியியல் கல்லூரி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x