

சென்னை: பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 15-ம் தேதி அந்தந்த பள்ளியில் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் எஸ்.சேதுராமவர்மா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த மே மாதம் நடைபெற்ற பிளஸ் 2 தேர்வை எழுதிய மாணவர்களுக்கு (மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு முடிவு உள்பட) பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 தேர்வு அசல் மதிப்பெண் சான்றிதழ் செப்டம்பர் 15-ம் தேதி முதல் வழங்கப்படும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி வாயிலாகவும் தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையம் வாயிலாகவும் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். மேலும், இதுதொடர்பான கூடுதல் விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.