Published : 01 Jul 2022 07:14 AM
Last Updated : 01 Jul 2022 07:14 AM

சிவகங்கை | அரிக்கேன் விளக்கில் படித்து 10-ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்

சோலுடையான்பட்டியில் அரிக்கேன் விளக்கில் படித்து 10-ம் வகுப்பு தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவர் அஜய்குமார்.

சிவகங்கை: கல்வி கற்பதற்கு வறுமை ஒருதடையல்ல என்பதை நிரூபித்திருக்கிறார் திருப்பத்தூர் அருகே வசிக்கும் அரசு பள்ளி மாணவர் ஒருவர்.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சோலுடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்கியலட்சுமி. அவரின் கணவர் ஏற்கெனவே இறந்துவிட்டார்.

இந்நிலையில், பாக்கியலட்சுமி கூலி வேலை செய்து தனது மகன் அஜய்குமாரை படிக்க வைத்து வருகிறார். இவர்களது வீட்டில் மின்சார வசதியில்லை. இதனால் இரவு நேரத்தில் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான் அஜய்குமார் படித்து வருகிறார்.

திருக்கோஷ்டியூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்த அஜய்குமார், அண்மையில் வெளியான பொதுத்தேர்வில் 483மதிப்பெண்கள் பெற்று அரசு பள்ளிகளுக்கான திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றுள்ளார். வறுமையான சூழ்நிலையிலும் அஜய்குமார் கவனத்தை சிதறவிடாமல் படித்து தேர்வில் சாதித்துள்ளார்.

தான் படிப்பதுடன் மட்டுமின்றி, அப்பகுதியில் நடைபெறும் இல்லம் தேடி கல்வி மையத்துக்குச் சென்றுதொடக்கப் பள்ளி மாணவர்களுக்கும் பாடம் சொல்லிக் கொடுத்து வருகிறார் அஜய்குமார். அவரைகிராம மக்கள் பாராட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x