Published : 28 Nov 2021 03:06 AM
Last Updated : 28 Nov 2021 03:06 AM

எம்.இ., எம்டெக் படிப்புக்கு விரைவில் கலந்தாய்வு: அண்ணா பல்கலைக்கழகம் தகவல்

சென்னை

முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு விரைவில் நடத்தப்படும் என்று அண்ணா பல்கலை. அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழக பொறியியல் கல்லூரிகளில் எம்இ, எம்டெக் உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஆண்டுதோறும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் பங்கேற்க ‘கேட்’ அல்லது ‘டான்செட்’ நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும்.

அதன்படி நடப்பு கல்வி ஆண்டுமாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு அக்.11 வரை நடைபெற்றது.

இந்நிலையில், தமிழக அரசின் 10.5 சதவீத இடஒதுக்கீடு குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் கலந்தாய்வு நடத்துவதில் சிக்கல் நிலவி வருகிறது. அதேநேரம், கல்வி ஆண்டில் 5 மாதங்கள் கடந்துவிட்டதால் உடனே கலந்தாய்வு நடத்துமாறு சமூக வலைதளங்களில் மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுபற்றி அண்ணா பல்கலை. அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘தமிழக அரசின் 10.5 சதவீத ஒதுக்கீடு,மத்திய அரசின் 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இவற்றில் விரைவில் முடிவுகள் வரும் என்று எதிர்பார்க்கிறோம். நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் கலந்தாய்வு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x