Published : 21 Nov 2021 03:06 AM
Last Updated : 21 Nov 2021 03:06 AM

தமிழகத்தில் அடுத்த கல்வி ஆண்டில் புதிதாக 10 அரசு கல்லூரிகள் தொடங்க அரசாணை வெளியீடு

புதுக்கோட்டை, வேலூர், தருமபுரி உட்பட 10 மாவட்டங்களில் அடுத்தகல்வி ஆண்டில் புதிதாக அரசுகலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்குவதற்கான அரசாணையை உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் தா.கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணை விவரம்:

தமிழகத்தில் புதிதாக 10 அரசுகலை, அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று சட்டப்பேரவை கூட்டத்தொடரில் உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி அறிவித்தார். அதில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, வேலூர் மாவட்டம் சேர்க்காடு, தருமபுரி மாவட்டம் ஏரியூர், ஈரோடுமாவட்டம் தாளவாடி, விருதுநகர்மாவட்டம் திருச்சுழி, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம், திருநெல்வேலி மாவட்டம் மானூர் ஆகிய 9 இடங்களில் இருபாலர் அரசு கலை, அறிவியல் கல்லூரிகள், திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லுாரில் மகளிர் கல்லூரி அமைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து, கல்லூரிக் கல்வி இயக்குநர் அனுப்பிய கருத்துருவின்படி 2022-23 கல்வி ஆண்டில் புதிதாக 10 கல்லூரிகள் தொடங்க அனுமதி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு கல்லூரியிலும் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பிஎஸ்சி கணிதம், கணினி அறிவியல் ஆகிய 5 பாடப் பிரிவுகள் தொடங்கப்படும். ஒவ்வொரு கல்லூரிக்கும் முதல் ஆண்டில் மட்டும் உதவி பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் தலா 17 பேர் என 10 கல்லூரிகளுக்கும் தலா170 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள். இதற்காக ரூ.24.83 கோடி ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x