Published : 17 Nov 2021 05:00 PM
Last Updated : 17 Nov 2021 05:00 PM

ஐசிஏஆர் தேர்வில் தேசிய அளவில் 2-ம் இடம்: திண்டுக்கல் மாணவி சாதனை

ஐசிஏஆர் தேர்வில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடம் பெற்ற திண்டுக்கல்லைச் சேர்ந்த ஓவியா. 

திண்டுக்கல்

அகில இந்திய அளவில் நடத்தப்படும் ஐசிஏஆர் தேர்வில் திண்டுக்கல் மாணவி அ.ஓவியா தமிழகத்தில் முதலிடத்தையும், அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

‘இந்தியன் கவுன்சில் ஆப் அக்ரிகல்ச்சர் ரிசர்ச்’ அமைப்பு ஆண்டுதோறும் பி.வி.எஸ்சி. (கால்நடை டாக்டர்) படிப்பு முடித்தவர்கள் மேற்படிப்பில் சேர எம்.வி.எஸ்.சி. படிப்புக்காக கால்நடைத் துறைக்கான அகில இந்தியத் தேர்வை நடத்துகிறது. இந்தத் தேர்வு செப்டம்பர் 17-ம் தேதி அகில இந்திய அளவில் நடைபெற்றது. திருநெல்வேலியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பி.வி.எஸ்.சி. முடித்த திண்டுக்கல் மாணவி அ.ஓவியா ஐசிஏஆர் தேர்வை எழுதினார்.

இதில் அவர் அகில இந்திய அளவில் இரண்டாவது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இதுகுறித்து மாணவி அ.ஓவியா 'இந்து தமிழ்' செய்தியாளரிடம் கூறும்போது, ''ஐசிஏஆர் தேர்வு எழுதி வெற்றி பெறுவதன் மூலம் கால்நடை மருத்துவ மேற்படிப்புக்கு இந்திய அளவில் உள்ள சிறந்த கல்லூரியைத் தேர்ந்தெடுக்கலாம்.

எனவே பி.வி.எஸ்.சி. படிப்பில் பாடங்களை முழுமையாகப் படித்தேன். ஐசிஏஆர் தேர்வுக்கு விண்ணப்பித்தவுடன் இரண்டு மாதங்களாக முழுமையாகத் தேர்வுக்குத் தயாரானேன். பாடத்தை மேலோட்டமாகப் படித்தால் அவர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளிப்பது சிரமம். எனவே அடிப்படைப் புரிதலுடன் படித்ததால்தான் வெற்றி பெற முடிந்தது.

மேலும் இதற்கு முன்பு ஐசிஏஆர் தேர்வு எழுதி வெற்றி பெற்றவர்கள் தேர்வை எதிர்கொள்வது குறித்து வழிகாட்டினர். அவர்களின் அறிவுரைகளும் தேர்வை எளிதில் எதிர்கொண்டு வெற்றி பெற உதவியது'' என்று தெரிவித்தார்.

ஓவியாவுக்குப் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரிப் பேராசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x