

தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவ இணையியல் படிப்பான உதவி செவிலியர் படிப்புக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துச் சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
’’பெருநகரச் சென்னை மாநகராட்சி பொது சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் 2021-2022ஆம் ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பான இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சி (ANM Course) தொடங்கப்பட உள்ளது.
இப்பயிற்சியில் பெருநகர சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரிசுகளுக்கும் மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும். மேலும், அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.
உதவி செவிலியர் பயிற்சிக்கு (ANM Course) (+2-வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்). தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர், தொ.நோ.ம.மனை எண்.187, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, தண்டையார்பேட்டை, சென்னை-600081-ல் உள்ள தொற்றுநோய் மருத்துவமனை அலுவலக வேலை நாட்களில் 17.11.2021 முதல் 22.11.2020 வரை (காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை) விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்.23.11.2021 மாலை 4.00 மணிக்குள். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது. தகுதியும், விருப்பமும் உள்ள மாணவிகள் தண்டையார்பேட்டை தொற்றுநோய் மருத்துவமனையில் இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்’’.
இவ்வாறு சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.