Last Updated : 22 Oct, 2021 02:56 PM

 

Published : 22 Oct 2021 02:56 PM
Last Updated : 22 Oct 2021 02:56 PM

பொதுத் தேர்வில் முதன்மை பாடங்கள் பிரிவில் பிராந்திய மொழிகள் ஏன் இல்லை? - சர்ச்சை அறிவிப்புக்கு சிபிஎஸ்இ விளக்கம்

புதுடெல்லி

நிர்வாக வசதிக்காக மட்டுமே அனைத்து பிராந்திய மொழிகளும் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதன்மை பாடங்கள் அல்லாத பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பால் சர்ச்சை ஏற்பட்டதை அடுத்து, சிபிஎஸ்இ விளக்கம் அளித்துள்ளது.

கரோனா போன்ற அசாதாரண சூழலை எதிர்கொள்ளும் வகையில் நடப்பு கல்வி ஆண்டில் 10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் 2 பருவங்களாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ ஏற்கெனவே அறிவித்திருந்தது.

அப்ஜெக்டிவ் முறையில் தேர்வு

அதன்படி, 10-ம் வகுப்புத் தேர்வு நவ.30 தொடங்கி டிச.11-ம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு டிச.1 முதல் 22-ம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் பருவத் தேர்வு அப்ஜெக்டிவ் முறையில் நடைபெறுகிறது.

அடுத்த ஆண்டு மார்ச் - ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் 2-ம் பருவத் தேர்வு அப்போதைய சூழலைப் பொறுத்து அப்ஜெக்டிவ் முறையிலோ அல்லது விரிவாக விடையளிக்கக் கூடிய தேர்வாகவோ நடத்தப்படும் என சிபிஎஸ்இ ஏற்கெனவே அறிவித்துள்ளது

இந்நிலையில், அனைத்து பிராந்திய மொழிகளும் 10, 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வில் முதன்மை அல்லாத பாடங்கள் அல்லாத பிரிவில் வைக்கப்பட்டுள்ளது என்று சிபிஎஸ்இ வெளியிட்ட அறிவிப்பால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

முன்னதாக பஞ்சாப் மாநில முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பஞ்சாபி மொழியை முதன்மைப் பாடங்கள் வரிசையில் இருந்து நீக்கியதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். பஞ்சாபிக் குழந்தைகள் தங்களின் தாய்மொழியைக் கற்கும் உரிமையை இந்த அறிவிப்பு சிதைப்பதாகவும் இந்த முடிவு கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிரானது என்றும் அவர் விமர்சித்திருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்துள்ள சிபிஎஸ்இ, ''ஒவ்வொரு பாடங்களும் கல்விசார் கோணத்தில் சமமான முக்கியத்துவம் கொண்டவைதான். பிராந்திய மொழிகளில் பஞ்சாபியும் ஒன்று. நிர்வாக வசதிக்காக மட்டுமே அனைத்து பிராந்திய மொழிகளும் முதன்மை பாடங்கள் அல்லாத பிரிவில் வைக்கப்பட்டுள்ளன'' என்று தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x