Published : 18 Oct 2021 03:11 AM
Last Updated : 18 Oct 2021 03:11 AM
மத்திய அரசின் என்எம்எம்எஸ், என்டிஎஸ்இ உள்ளிட்ட கல்வி உதவித்தொகைக்கான தேர்வை அரசுப்பள்ளி மாணவர்கள் எதிர்கொள்ளும் வகையில் தயாரிக்கப்பட்ட விழிப்புணர்வு கையேட்டை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டார்.
சென்னை வேளச்சேரி அரிமா சங்கத்தின் சார்பில் ‘புதுமை திட்டம்’ என்ற பெயரில் பள்ளி மாணவர்கள் என்எம்எம்எஸ் தேர்வுக்கு தயாராக உதவும் வகையில் வழிகாட்டு கையேடு வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் வெளியீட்டு விழா சென்னை கிண்டியில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி நூலை வெளியிட்டு பேசும்போது, ``மத்திய அரசின் என்எம்எம்எஸ், என்டிஎஸ்இ உட்பட கல்வி உதவித்தொகைக்கான தகுதித் தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை பள்ளி மாணவர்களிடம் அதிகரிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இத்தகைய வழிகாட்டு கையேடுகள் மாணவர்கள் தேர்வில் எளிதாக வெற்றிபெற உதவியாக இருக்கும்’’ என்றார்.
நூல் வடிவமைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் மோகன் கூறும்போது, ‘‘அரசுப்பள்ளி மாணவர்களின் அச்சத்தை களைவதே இந்த நூலின் நோக்கமாகும். மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில்தான் புத்தகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் 2 பிரதிகளை https://drive.google.com/file/d/1IbTau0O0Co340c1rcVvvzNaNAdc1SV_2/view?usp=drivesdk மற்றும் https://drive.google.com/file/d/1aWAZSdzqC68ILaGz27j04Z6cbQBcr8Sl/view?usp=drivesdk ஆகிய இணையதளத்தில் இருந்து இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். டிஎன்பிஎஸ், யுபிஎஸ்சி உட்பட இதர போட்டித்தேர்வுகளுக்கு தயாராகுபவர்களுக்கும் இந்த புத்தகம் உதவியாக இருக்கும்’’என்றார்.
பின்னர் அமைச்சர் அன்பில் மகேஸ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பள்ளிக்கல்வித் துறையின் திட்டங்கள் அனைத்தும் மாணவர்களுக்கு பலன்தரும் விதமாகவே செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அனைத்துவிதமான போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளன. இதுதவிர என்எம்எம்எஸ் தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்கள், அதற்கு வழிகாட்டிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்குவது குறித்து துறைசார் அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். நீட் தேர்வுக்கு எதிரான சட்டப்போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மறுபுறம் பள்ளிமாணவர்களை தேர்வுக்கு தயார்படுத்தும் பணிகளும் தொடர்கின்றன.
நடப்பாண்டும் இபாக்ஸ் நிறுவனம் மூலம் நீட் பயிற்சியை தொடரவும் பரிசீலித்து வருகிறோம். அதேபோல், அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில பேச்சு பயிற்சி வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மழலையர் பள்ளிகளை திறப்பது மற்றும் மக்கள் பள்ளி திட்டம் பற்றியும் முதல்வருடன் (இன்று) ஆலோசித்து அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பிரின்ஸ் குழும கல்வி நிறுவனங்களின் தலைவர் வாசுதேவன், வேளச்சேரி அரிமா சங்கத்தின் தலைவர் கணேஷ், செயலாளர் ராஜா உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT