Published : 11 Oct 2021 03:12 AM
Last Updated : 11 Oct 2021 03:12 AM

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு தமிழகத்தில் 30 ஆயிரம் பேர் எழுதினர்

ஐஏஎஸ், ஐஎஃப்எஸ், ஐபிஎஸ், ஐஆர்எஸ்உள்ளிட்ட 24 வகையான உயர் பணிகளை நேரடியாக நிரப்ப சிவில் சர்வீசஸ் போட்டித்தேர்வு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்தும் இந்த தேர்வானது முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, ஆளுமைத் தேர்வு என 3 நிலைகளை உள்ளடக்கியது.

அந்த வகையில், இந்த ஆண்டு சிவில் சர்வீசஸ் பணிகளில் 712 காலியிடங்களை நிரப்பு வகையில் முதல்நிலைத் தேர்வு நேற்று நாடு முழுவதும் நடந்தது. காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரை பொது அறிவு தாள் தேர்வும் பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை சி-சாட் எனப்படும் திறனறித்தேர்வும் நடந்தது. நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர்.

தமிழகத்தில் சென்னை, மதுரை,கோவை, வேலூர், திருச்சி ஆகிய5 மாவட்டங்களில் 75 மையங்களில் முதல்நிலைத்தேர்வு நடந்தது. மாநிலம் முழுவதும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வெழுதினர். வழக்கமாக தமிழகத்தில் உள்ள தேர்வு மையங்களின் வளாகத்தில் தேர்வர்களுக்கான அறிவுரைகள் அடங்கிய அறிவிப்பு ஆங்கிலம் மற்றும்மாநில மொழியான தமிழில் வைக்கப்பட்டிருக்கும். ஆனால், இந்த ஆண்டு அவ்வாறு இல்லாமல் முழுவதும் இந்தியில் அறிவுரைகள் அடங்கிய அறிவிப்பு இடம்பெற்றிருந்ததால் தமிழக மாணவர்கள் அவற்றை படிக்க முடியாமல் பெரிதும் சிரமப்பட்டனர்.

சென்னை மையங்களில் தேர்வெழு திய மாணவர்கள் கூறும்போது, "கடந்த ஆறேழு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வினாக்கள் மிகவும் கடினமாக இருந்தன. பொது அறிவு தாள், திறனறித்தேர்வு இரண்டிலும் இதேநிலைதான். ஐஐடி, ஐஐஎஸ்சி உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் படித்த மாணவர்கள் எளிதாக அணுகும்வகையில் கேள்விகள் அமைந்திருந்தன. விளையாட்டுத் துறைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x