Published : 10 Oct 2021 03:15 AM
Last Updated : 10 Oct 2021 03:15 AM

1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

சென்னை

1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்குவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தொடக்கக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகளுக்கு தொடக்கக் கல்வி இயக்குநர் க.அறிவொளி அனுப்பிய சுற்றறிக்கை:

தமிழக அரசின் அறிவுறுத்தலின்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நவ.1முதல் நேரடி வகுப்புகள் தொடங்குகின்றன. இதையடுத்து கரோனா வழிமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் திறப்புக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்குப் பின்பு மாணவர்கள் நேரடி வகுப்பில் கலந்து கொள்வதால் அவர்களை உளவியல்ரீதியாக தயார்படுத்தி, எளிதில் அணுகும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

மாணவர்களுக்கு எழுத்துப் பயிற்சி, கதைகள் கூறுதல், ஓவியம் வரைதல் ஆகிய செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும்.மாணவர்களின் உடல்வெப்ப பரிசோதனை செய்ய வசதிகள் ஏற்படுத்த வேண்டும். வளாகங்களில் முகக்கவசம் அணிதல், தனிநபர் இடைவெளி, கிருமிநாசினி பயன்பாடு கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

மாணவர்களின் எண்ணிக்கைஅதிகமாகவும், வகுப்பறை குறைவாகவும் இருக்கும்பட்சத்தில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட வேண்டும். ஆசிரியர்கள், பணியாளர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதை உறுதிசெய்ய வேண்டும். கற்றல், கற்பித்தல் பணி, மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்க வேண்டும்.

கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கல்வித்துறை அலுவலர்கள்ஆய்வு செய்து உரிய ஆலோசனைகளை வழங்க வேண்டும். மேலும்,அனைத்து பள்ளிகளும் திறப்பதற்குத் தயார் நிலையில் உள்ளதா என்பது குறித்த அறிக்கையை அக்.22-க்குள் அளிக்க வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x