Last Updated : 30 Sep, 2021 01:42 PM

 

Published : 30 Sep 2021 01:42 PM
Last Updated : 30 Sep 2021 01:42 PM

டெல்லியில் தடுப்பூசி போடாத ஆசிரியர்கள், ஊழியர்கள் பள்ளிக்கு வர அனுமதியில்லை

புதுடெல்லி

கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அக்.15 முதல் பள்ளிக்கு வர அனுமதியில்லை என்றும் அவர்கள் விடுமுறையில் இருப்பதாகக் கருதப்படுவர் என்றும் டெல்லி கல்வித் துறை அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் கரோனா 2-வது அலை ஓரளவு கட்டுக்குள் உள்ளதால் பல்வேறு மாநிலங்கள் பள்ளிகளைத் திறப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில் டெல்லியில் ஏற்கெனவே 9 முதல் 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. அதேபோல நவம்பர் 1-ம் தேதி முதல் 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்குப் பள்ளிகள் திறக்கப்படும் என்று நேற்று டெல்லி அரசு சார்பில் அறிவிப்பு வெளியானது.

இந்நிலையில், கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசுப் பள்ளி ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு அக்.15 முதல் பள்ளிக்கு வர அனுமதியில்லை என்றும் அவர்கள் விடுமுறையில் இருப்பதாகக் கருதப்படுவர் என்றும் டெல்லி கல்வித் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து கல்வித்துறை இயக்குநர் உதித் ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "நாடு முழுவதுமே கரோனா பெருந்தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது அனைவருக்கும் தெரியும். எனவே தொற்றைக் கட்டுப்படுத்தவும் குறைக்கவும் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டியது அவசியம்.

எனவே பள்ளியைப் பொறுத்தவரையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இதை மாவட்டக் கல்வி அதிகாரிகளும் பள்ளி தலைமை ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத ஆசிரியர்களும் ஆசிரியரல்லாத ஊழியர்களும் பள்ளிக்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் இல்லாதது விடுமுறையாகக் கருதப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களும் ஊழியர்களும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று டெல்லி மாநிலக் கல்வித்துறை அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x