Last Updated : 29 Sep, 2021 07:48 PM

 

Published : 29 Sep 2021 07:48 PM
Last Updated : 29 Sep 2021 07:48 PM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. ஊழியர்கள் உண்ணாவிரதப் போராட்டம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தினக்கூலி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரி பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தொகுப்பூதிய ஊழியர்கள், கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில் பணியமர்த்தப்பட்ட ஊழியர்கள், தினக்கூலி ஊழியர்கள் என 350-க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு ஒரு நாளைக்கு ரூ.100 மட்டுமே கூலி வழங்கப்படுகிறது.

விடுமுறை எடுத்தால் கூலி இல்லை. இதில் பல பேருக்கு வயது 40 முதல் 50-ஐத் தாண்டிவிட்டது. வேறு வேலைக்குச் செல்ல முடியாத நிலையில், அரசுத் தரப்பில் பணி நிரந்தரம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து பணியாற்றி வருகிறார்கள். தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று அதிமுக ஆட்சியில் இருந்தபோது முதல்வர் உள்ளிட்ட துறை சார்ந்த அமைச்சர், அதிகாரிகளிடம் மனு கொடுத்து போராட்டத்தையும் நடத்தினர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதனால் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பிறகு அவர்களிடத்திலும் இதே கோரிக்கையை வைத்துள்ளனர். தற்போது அண்ணா பல்கலைக்கழகத்தில் இதுபோன்று பணியாற்றியவர்களைத் தமிழக அரசு பணி நிரந்தரம் செய்துள்ளது. அதேபோல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்யவேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்து இன்று (செப்.29) பல்கலைக்கழக வளாகத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் அரசின் கவன ஈர்ப்பு உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இந்தப் போராட்டத்தில் பல்கலைக்கழக ஊழியர்கள் மற்றும் ஊழியர் சங்கத்தினர் திரளாகக் கலந்துகொண்டனர். இதுகுறித்துப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் மனோகரன் செய்திளார்களிடம் கூறுகையில், ’’இந்த கூலித் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். செய்யவில்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும்’’ என்று தெரிவித்தார்.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x