Published : 24 Sep 2021 01:55 PM
Last Updated : 24 Sep 2021 01:55 PM

உயர்கல்வி வரை மாதம் தோறும் உதவித்தொகை: அக்.24-ல் நாடு முழுவதும் தேசிய திறனாய்வுத் தேர்வு 

உயர்கல்வி வரை உதவித்தொகை வழங்கும் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான 2-வது கட்டத் தேர்வு நாடு முழுவதும் அக்.24-ம் தேதி நடைபெறும் என்று என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகைக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு (என்டிஎஸ்இ) நடத்தப்படுகிறது. மாநில, தேசியளவில் என 2 கட்டங்களாக நடைபெறும் இந்தத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு உயர்கல்வி (பிஎச்டி) முடிக்கும் வரை உதவித்தொகை வழங்கப்படும்.

குறிப்பாகத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு 11, 12-ம் வகுப்பு படிக்கும்போது மாதந்தோறும் ரூ.1,250 தொகையும், உயர்கல்வியில் இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளுக்கு ரூ.2,000 தொகையும் வழங்கப்படும். யுஜிசி விதிமுறைகளின்படி பிஎச்டி மாணவர்களுக்குத் தேவையான கல்வி உதவித்தொகை வழங்கப்படும். தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) சார்பில் இந்தத் தேர்வு (NTSE) நடத்தப்படுகிறது.

இந்நிலையில் 2-வது கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு, அக்டோபர் 24-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜூன் 13-ம் தேதி இந்தத் தேர்வு நடைபெறுவதாக இருந்த நிலையில், கரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் அக்.24-ம் தேதி நாடு முழுவதும் தேர்வு நடைபெறுகிறது. இதில் இரண்டு தேர்வுகள் தலா 100 மதிப்பெண்களுக்கு இரண்டு மணிநேரம் நடைபெறும்.

முதல்கட்டத் தேர்வில் தேர்ச்சி அடைந்தவர்கள் மட்டுமே இந்தத் தேர்வை எழுத முடியும். அக்டோபர் 8-ம் தேதியன்று தேர்வுக்கான அனுமதிச் சீட்டை மாணவர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று என்சிஇஆர்டி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககம் மூலம் முதல்கட்ட தேசிய திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x