Published : 23 Sep 2021 03:12 AM
Last Updated : 23 Sep 2021 03:12 AM

ஏழை மாணவர் இலவச கல்வித் திட்டத்தில் கூடுதலாக 30 சதவீதம் மாணவர்கள் சேர்க்கை: சென்னை பல்கலை. துணைவேந்தர் தகவல்

பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்கள் பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகத்தில் இலவச கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், பல்கலை.யின் அங்கீகாரம் பெற்ற கல்லூரிகளில் கட்டணமின்றிப் பயிலலாம்.

இந்த திட்டத்தில் நடப்பு கல்வியாண்டில் தேர்வு செய்யப்பட்டுள்ள 313 மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கும் நிகழ்ச்சி பல்கலை. வளாகத்தில் நேற்று நடைபெற்றது. மாணவர்களுக்கு சேர்க்கை ஆணை வழங்கி துணைவேந்தர் எஸ்.கவுரி பேசியதாவது:

கடந்த ஆண்டு இலவச கல்வித் திட்டத்தில் 213 மாணவர்கள் சேர்க்கப்பட்ட நிலையில், நடப்பாண்டு 313 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 30 சதவீதம் கூடுதலாகும்.இதில் சேரும் மாணவர்களுக்கு, அவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகள் வழங்கப்பட்டுள்ளன. சில கல்லூரிகளில் தேர்வுக் கட்டணம் செலுத்துவதிலும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில், பல்கலை. பதிவாளர் மதிவாணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x