Published : 18 Sep 2021 03:13 AM
Last Updated : 18 Sep 2021 03:13 AM

ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்

திருச்சி என்ஐடியின் கற்பித்தல் மையம் சார்பில் நடத்தப்பட்ட பயிற்சியில் பயின்ற அரசுப் பள்ளி மாணவர் அருண்குமார் ஜேஇஇ மெயின் தேர்வில் 98.24 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றுள்ளார்.

திருச்சி என்ஐடியின் கற்பித்தல் மையம் சார்பில், இங்கு பயிலும் மாணவர்கள், திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ மெயின் தேர்வு எழுத பயிற்சியளித்து வருகின்றனர்.

இந்தப் பயிற்சியில் பங்கேற்ற திருச்சி மாவட்டம் செவல்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் அருண்குமார் தற்போது நடைபெற்ற ஜேஇஇ மெயின் தேர்வில் 98.24 சதவீத மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இவர் தரவரிசைப் பட்டியலில் அகில இந்திய அளவில்17,061-ம் இடம், ஓபிசி-என்சிஎல்-ல் 3,649-ம் இடம்பெற்றுள்ளார்.

என்ஐடி மாணவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் ஆண்டுதோறும் அரசுப் பள்ளியில் பிளஸ் 2 பயிலும் ஜேஇஇ தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்கு தனியாக தகுதித் தேர்வு வைத்து 30 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு என்ஐடி மாணவர்களின் கற்பித்தல் மையம் மூலம் வார விடுமுறை நாட்களில் பயிற்சியளிக்கப்பட்டு வருகிறது.

இந்த மையத்தில் பயிற்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களில் 2019-ம் ஆண்டில் இருவரும், 2020-ம் ஆண்டில் 4 பேரும், இந்த ஆண்டு ஒருவரும் ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து இந்த பயிற்சி மையத்தின் ஒருங்கிணைப்பாளரும், என்ஐடி மாணவருமான ரோகித் கூறியது: வார விடுமுறை நாட்களில் இந்த மாணவர்களை என்ஐடியிலேயே தங்க வைத்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டதால், ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது என்றார்.

திருச்சி என்ஐடி இயக்குநர் மினி ஷாஜி தாமஸ், கற்பித்தல் மையத்தின் செயல்பாடுகளை பாராட்டியதுடன், ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர் அருண்குமாருக்கு வாழ்த்துகளை தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x