Published : 16 Sep 2021 06:03 PM
Last Updated : 16 Sep 2021 06:03 PM

மாணவர்களைப் பள்ளிக்கு வரும்படி வற்புறுத்தக் கூடாது: அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவுறுத்தல்

மாணவர்களைப் பள்ளிக்கு வரும்படி வற்புறுத்தக் கூடாது என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவுறுத்தியுள்ளார். மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது முக்கியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 1 முதல் 8-ம் வகுப்புகளைத் திறப்பது குறித்த பள்ளிக் கல்வித்துறையின் அறிக்கையை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வழங்கினார். அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனையின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறும்போது, ''தமிழகத்தில் பள்ளிகளைத் திறப்பது குறித்து உங்களுடைய கருத்து என்ன, ஏற்கெனவே இதுகுறித்து அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறீர்களே என்று முதல்வர் கேட்டார். அப்போது ஒவ்வொரு முதன்மைக் கல்வி அலுவலரும் ஒவ்வொரு விதமான கருத்துகளைக் கூறினர். அந்த அறிக்கையை உங்களிடம் சமர்ப்பித்துள்ளோம். நீங்கள் என்ன முடிவு எடுக்கிறீர்களோ, அதற்கேற்ப எங்களைத் தயார் நிலையில் வைத்துக் கொள்வோம் என்று தெரிவித்தேன்.

அறிக்கையில் எல்லாவிதமான பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளோம். தொடக்கப்பள்ளி வகுப்புகளையும் சேர்த்துத் திறக்கலாம் என்றும் தெரிவித்துள்ளோம். குறைந்தபட்சம் நடுநிலைப் பள்ளி வகுப்புகளை மட்டுமாவது திறக்கலாம் என்று கூறியுள்ளோம். 9 முதல் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே இருக்கட்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளோம். எனவே முதல்வரின் முடிவுக்காகக் காத்திருக்கிறோம்.

தமிழகத்தில் 9- 12ஆம் வகுப்பு வரை பயிலும் 35 லட்சம் மாணவர்களில் 28 லட்சம் பேர் பள்ளிகளுக்கு வருகின்றனர். அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமல்ல, நம்முடைய மாநிலத்தில் படிக்கும் மாணவர்கள் அனைவரின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டிய கடமை அரசுக்கும், முதல்வருக்கும், பள்ளிக்கல்வித் துறைக்கும் உள்ளது. அந்த வகையில் மாணவர்களைப் பள்ளிக்கு வரும்படி யாரும் வற்புறுத்த வேண்டாம்.

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்வர் எப்படி சுகாதாரத் துறை உள்ளிட்ட வல்லுநர் குழுவுடன் இணைந்து ஆலோசித்து முடிவெடுக்கிறாரோ, அதேபோன்ற முடிவை பள்ளிகள் திறப்பு குறித்தும் முதல்வர் எடுப்பார்'' என்று அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.

இதற்கிடையே 6 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு அக்டோபர் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x