Published : 14 Sep 2021 12:50 PM
Last Updated : 14 Sep 2021 12:50 PM

பொறியியல் தரவரிசைப் பட்டியல் வெளியீடு; 13 பேர் முழு மதிப்பெண்களுடன் முதலிடம் 

பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இன்று ஆன்லைனில் வெளியிடப்பட்டுள்ளது. இதை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வெளியிட்டார். இதில் 13 மாணவர்கள் முழு மதிப்பெண்களுடன் முதலிடம் பிடித்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் இணையதளத்தில் இன்று வெளியிடப்பட்டது. முன்னதாகப் பொறியியல் படிப்புகளில் சேர 1,74,930 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். அதில் 1,45,045 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி இருந்தனர்.

இந்த ஆண்டு 1,39,033 பேரிடம் இருந்து தகுதியான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 87291 பேர் மாணவர்கள். 51730 பேர் மாணவிகள். மூன்றாம் பாலினத்தவர் 12 பேர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது. இந்தப் பட்டியலில் 13 மாணவர்கள் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்று, முதலிடத்தைப் பெற்றுள்ளனர்.

440 கல்லூரிகள் பங்கேற்பு

தமிழகத்தில் இந்தக் கல்வி ஆண்டில் அரசு, தனியார் கல்லூரிகளில் 440 கல்லூரிகள் மட்டுமே பொறியியல் கலந்தாய்வில் பங்கேற்கின்றன. அதன்படி, 1 லட்சத்து 51 ஆயிரத்து 870 இடங்கள் மட்டுமே கலந்தாய்வுக்குக் கிடைத்துள்ளன. கடந்த ஆண்டில் 461 கல்லூரிகளில் 1 லட்சத்து 63 ஆயிரத்து 154 இடங்கள் கலந்தாய்வுக்குக் கிடைத்தன.

இதனால் கடந்த ஆண்டைவிட தற்போது 11,284 இடங்கள் குறைந்துள்ளன. விண்ணப்பித்தவர்களைவிட இடங்கள் எண்ணிக்கையும் குறைவாகவே உள்ளது. இதனால் விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் பொறியியல் படிப்புக்கான இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது.

பொறியியல் கலந்தாய்வு

இதைத் தொடர்ந்து முதல்கட்டமாக, அரசுப் பள்ளி மாணவர்கள், மாற்றுத் திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கான சிறப்புப் பிரிவு கலந்தாய்வு செப்.17 முதல் 24-ம் தேதி வரையும், பொதுப் பிரிவு கலந்தாய்வு செப்.27 முதல் அக்.17-ம் தேதி வரையும் நடக்க உள்ளன.

மாணவர்கள் தங்களுடைய தரவரிசைப் பட்டியலைக் காண: https://www.tneaonline.org/ என்ற முகவரியைக் காணலாம்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x