Published : 12 Sep 2021 03:18 AM
Last Updated : 12 Sep 2021 03:18 AM

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு- 16.14 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர்: பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 16.14 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தேர்வை எழுதும் மாணவ, மாணவியருக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகள், ஆயுர் வேதா, சித்தா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட இந்திய மருத்துவ இளநிலை படிப்புகளுக்காக ஆண்டுதோறும் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது. ஆங்கிலம், இந்தி, தமிழ் உள்ளிட்ட 13 மொழிகளில் தேர்வு நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு நுழைவுத் தேர்வு ஏப்ரல் 18-ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. கரோனா 2-வது அலை காரணமாக செப்டம்பர் 12-ம் தேதிக்கு தேர்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதன்படி நாடு முழுவதும் இன்று நீட் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. இந்த தேர்வை 16.14 லட்சம் மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். தமிழகத் தில் மட்டும் 1.20 லட்சம் பேர் தேர்வை எழுத உள்ளனர். கரோனா வைரஸ் பர வல் தடுப்பு நடவடிக்கையாக நீட் தேர்வு மையங்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன்படி நாடு முழுவதும் 3,858 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

நீட் தேர்வு எழுத வரும் மாணவ, மாணவியர் பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிகளை தேசிய தேர்வு முகமை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வழிகாட்டு நெறிகளை அனைத்து மாணவர்களும் கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என்று தேசிய தேர்வு முகமை கேட்டுக் கொண்டுள்ளது.

மத்திய அமைச்சர் கடிதம்

இதனிடையே மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதில், நீட் நுழைவுத் தேர்வை நடத்த மாநில அரசுகள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. எனவே நீட் தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் குறித்த நேரத்தில் நீட் நுழைவுத் தேர்வு மையத்துக்கு செல்ல மாநில அரசுகள் உதவி செய்ய வேண்டும்" என்று அமைச்சர் தர்மேந்திர பிரதான் கேட்டுக் கொண்டுள்ளார்.

நீட் நுழைவுத் தேர்வுக்கான வினாத் தாள் வெளியாகி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இத்தகைய வதந்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்று தேசிய தேர்வு முகமை இயக்குநர் வினீத் ஜோஷி அறிவுறுத்தியுள்ளார்.

அவர் மாநில அரசுகளுக்கு அனுப்பியு்ள்ள கடிதத்தில், "கரோனா 2-வது அலையின்போது மிகப்பெரிய பாதிப்புகளை எதிர்கொண்டோம். இந்த சூழலில் நீட் நுழைவுத் தேர்வு நடத்தப்பட உள்ளது. தேர்வை சுமுகமாக நடத்த அனைத்து மாநில அரசுகளும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைவர்களுக்கு மாநில முதல்வர்கள் உரிய அறிவுரைகளை வழங்க வேண்டும். அப்போதுதான் நீட் தேர்வை வெற்றிகரமாக நடத்த முடியும்" என்று தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாடுகள்

தமிழகத்தில் சென்னை, திருவள் ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருச்சி, மதுரை, கோவை, வேலூர், திருநெல்வேலி, திருப்பூர், சேலம், கடலூர், கரூர், நாகர்கோவில், நாமக் கல், தஞ்சாவூர், விருதுநகர், திண்டுக் கல் உட்பட நாடு முழுவதும் 202 நகரங் களில் நீட் தேர்வு மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சென்னையில் 33 மையங் களில் நீட் தேர்வு நடைபெறுகிறது. இதையொட்டி சென்னையில் மாநகர பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை நீட் தேர்வு நடைபெற உள்ளது. மாணவ, மாணவியர் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையத்தில் இருக்க வேண்டும். அனுமதி அட்டை, அடையாள அட்டை, மாற்றுத் திறனாளி யாக இருந்தால் அதற்கான சான்றிதழ் வைத்திருக்க வேண்டும். மின்னணு பொருட்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. உட்பக்கம் தெளிவாக தெரியும் தண்ணீர் பாட்டில் கொண்டு செல்லலாம். 50 மி.லி. சானிடைசர் எடுத்துச் செல்லலாம்.

ஏற்கெனவே பின்பற்றப்படும் ஆடை கட்டுப்பாடுகள் இந்த ஆண்டும் கடுமையாக பின்பற்றப்படும். தேர்வு மையத்தில் மாணவர்களுக்கு புதிதாக என் 95 முகக்கவசம் வழங்கப்படும். ஏற்கெனவே அணிந்திருக்கும் முகக் கவசத்தை கழற்றிவிட்டு புதிய முகக்கவசத்தை அணிய வேண்டும்.

தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளின் உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் அளவு பரிசோதிக்கப்படும். உடல் வெப்பநிலை அதிகமுடைய மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் தேர்வு எழுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆள்மாறாட்ட மோசடி

நீட் நுழைவுத் தேர்வில் ஆள்மாறாட்ட மோசடிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த மோசடியை தடுக்க அந்தந்த மாநில போலீஸார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ராஜஸ்தான் மாநிலம் ஆஜ்மீரில் ஆள்மாறாட்ட மோசடி தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ஆஜ்மீர் போலீஸ் அதிகாரி செங்கதிர் கூறும்போது, "ஏற்கெனவே நீட் தேர்வில் வெற்றி பெற்றவர்களை நீட் தேர்வு எழுத வைக்க முயற்சி நடைபெற்றது. இதற்காக ரூ.5 லட்சம் முதல் ரூ.30 லட்சம் வரை பேரம் பேசப்பட்டுள்ளது. இந்த மோசடி தொடர்பாக டெல்லியில் கல்வி ஆலோசனை மையம் நடத்தி வரும் ஆர்பித் சுவாமி, கஜேந்தர் சுவாமி, முகமது ஆகிய 3 பேரை கைது செய்துள்ளோம். தனிப்படை போலீஸார், பெற்றோர் வேடத்தில் சென்று பேரம் நடத்தியபோது இந்த கும்பல் பிடிபட்டது" என்று தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x