Published : 06 Sep 2021 03:15 AM
Last Updated : 06 Sep 2021 03:15 AM

சென்னை மாவட்டத்தில் தேர்வான 15 பேருக்கு மாநில நல்லாசிரியர் விருது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

2020-21-ம் கல்வியாண்டில் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 389 ஆசிரியர்களுக்கு விருதுகள் வழங்குவதற்கு அடையாளமாக சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 15 ஆசிரியர்களுக்கு சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று விருது வழங்கி கவுரவித்தார். பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர், துறை ஆணையர் ஆகியோர் உடனிருந்தனர்.

சென்னை

மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான 15 ஆசிரியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருது வழங்கி கவுரவிக்கப்படும்.

அதன்படி, தமிழகத்தில் சிறந்த ஆசிரியர்களுக்கு ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’என்ற பெயரில் மாநில நல்லாசிரியர் அங்கீகாரம் வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டு அனைத்து விதமான பள்ளிகளில் பணிபுரிந்த 379 ஆசிரியர்கள் உட்பட மொத்தம் 389 பேர் மாநில நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்குவதன் அடையாளமாக சென்னை மாவட்டத்தில் தேர்வான ஆசிரியர்கள் 15 பேருக்கு மட்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் விருதுகளை வழங்கி கவுரவித்தார்.

இந்நிகழ்ச்சியில், பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதன்மைச் செயலர் காகர்லா ஷாஉள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

வழக்கமாக மாநில நல்லாசிரியர் விருது சான்றிதழில் முதல்வரின் புகைப்படம் இடம் பெற்றிருக்கும். ஆனால், நடப்பாண்டு வழங்கப்பட்ட நல்லாசிரியர் சான்றுகளில் முதல்வரின் புகைப்படம் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x