Published : 30 Aug 2021 07:37 PM
Last Updated : 30 Aug 2021 07:37 PM

மாணவர்கள் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்: தமிழக போக்குவரத்து அமைச்சர் அறிவிப்பு

பள்ளி மற்றும்‌ கல்லூரி மாணவ, மாணவிகள்‌ வரும்‌ செப்டம்பர்‌ 1 முதல்‌ அடையாள அட்டை, சீருடையுடன்‌ அரசுப் பேருந்துகளில்‌ கட்டணமின்றிப் பயணம்‌ செய்யலாம்‌ என்று போக்குவரத்துத்துறை அமைச்சர்‌ ராஜகண்ணப்பன்‌ தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

’’கோவிட்‌-19 கரோனா தொற்று ஊரடங்கு காரணமாக இதுநாள்‌ வரை பள்ளி, கல்லூரிகள்‌ திறக்கப்படாத நிலையில்‌. தமிழக அரசு அறிவித்த கரோனா ஊரடங்கு தளர்வுகள்‌ மற்றும்‌ அரசு வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்‌ அடிப்படையில்‌, பள்ளி மற்றும்‌ அரசுக் கல்தூரிகள்‌ வரும்‌ 01.09.2021 முதல்‌ திறக்கப்பட உள்ளன.

எனவே 2021-22 கல்வியாண்டில்‌, மாணவர்‌/மாணவியர்களுக்கான கட்டணமில்லாப் பேருந்து பயண அட்டை அனைத்து போக்குவரத்துக்‌ கழகங்களால்‌ வழங்கப்படும்‌வரை அரசுப் பேருந்துகளில்‌ பள்ளி மாணவ மாணவியர் சீருடை அல்லது பள்ளிகளில்‌ வழங்கப்பட்ட புகைப்படத்துடன்‌ கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம்‌ காண்பித்து தத்தம்‌ இருப்பிடத்தில் இருந்து பயிலும்‌ பள்ளி வரை சென்றுவர, கட்டணமின்றிப் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்‌.

அதே போன்று, அரசு கல்லூரி, அரசு பல்தொழில்நுட்ப கல்லூரி, அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில்‌ பயிலும்‌ மாணவ / மாணவியர்கள்‌ தங்களது கல்வி நிறுவனத்தால்‌ வழங்கிய புகைப்படத்துடன்‌ கூடிய அடையாள அட்டையை, நடத்துநர்களிடம்‌ காண்பித்து தத்தம்‌ இருப்பிடத்தில் இருந்து பயிலும்‌ கல்வி நிறுவனம்‌ வரை சென்றுவர, கட்டணமின்றிப் பயணிக்க அனுமதி அளிக்கப்படுகிறது என்பதைத் தெரிவித்துக்கொள்கிறோம்‌’’.

இவ்வாறு அமைச்சர்‌ ராஜகண்ணப்பன்‌ தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x