Last Updated : 30 Aug, 2021 05:37 PM

 

Published : 30 Aug 2021 05:37 PM
Last Updated : 30 Aug 2021 05:37 PM

அரசுக் கல்லூரியாக மாறிய உறுப்புக் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேரத் தயக்கம்: என்ன காரணம்?

மதுரை

அரசுக் கல்லூரியாக மாறிய உறுப்புக் கல்லூரிகளில் கிராமப்புற மாணவர்கள் சேரத் தயக்கம் காட்டி வருகின்றனர்.

மதுரை மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநரக நிர்வாகத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் 26 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் செயல்படுகின்றன. ஏற்கெனவே காமராசர் பல்கலைக்கழக நிர்வாகத்தின் கீழ் இயங்கிய அருப்புக்கோட்டை, திருமங்கலம், சாத்தூர், தேனி கோட்டூர் ஆகிய உறுப்புக் கல்லூரிகளும் தற்போது அரசுக் கல்லூரிகளாக மாற்றப்பட்டுள்ளன.

இக்கல்லூரிகளில் அரசு விதிமுறையின்படி, மாணவர் சேர்க்கை கடந்த வாரம் தொடங்கியது. அரசுக் கல்லூரியாக மாறிய ஒவ்வொரு உறுப்புக் கல்லூரியிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம், பி.காம். போன்ற இளநிலை வகுப்புகளே உள்ளன. பிற ஆண்டுகளை ஒப்பிடும்போது, இவ்வாண்டு ஆல் பாஸ் திட்டத்தால் இக்கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கும் என முதல்வர்கள் எதிர்பார்த்தனர். அருப்புக்கோட்டை உள்ளிட்ட கிராமப்புறத்தை ஒட்டிய கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைவாகவே இருப்பதாகக் கூறப்படுகிறது.

போதிய கட்டமைப்பு வசதியின்மை, சிலர் கல்லூரி நிர்வாகத்திற்கு எதிராக சில கருத்துகளைப் பரப்பியதால், மாணவர்கள் தயக்கம் காட்டுகிறார்களோ என்ற சந்தேகமும் உள்ளதாக அக்கல்லூரி ஆசிரியர்கள் சிலர் கூறுகின்றனர். மாணவர் சேர்க்கையை அதிகரிக்கக் கல்லூரி முதல்வர்கள், இணை இயக்குநர் முயல வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து அக்கல்லூரி ஆசிரியர்கள் சிலர் கூறும்போது, ''குறைந்த கல்விக் கட்டணத்தில் கிராமப்புற மாணவர்கள் உயர்கல்வி பயிலும் நோக்கில் அருப்புக்கோட்டை, சாத்தூர், திருமங்கலம் போன்ற இடங்களில் பல்கலை நிர்வாகம் உறுப்புக் கல்லூரிகளைத் தொடங்கியது. பெரும்பாலும் ஒவ்வொரு பாடப் பிரிவுக்கும் 3 அல்லது 5 மடங்கு விண்ணப்பங்கள் வரும். மாணவர் சேர்க்கையிலும் போட்டி இருக்கும். அரசுக் கல்லூரியாக மாறியபின், கடந்த ஆண்டு ஆன்லைன் மூலமே விண்ணப்பம் பெற்று மாணவர் சேர்க்கை நடந்தது. இவ்வாண்டும் ஓரளவுக்கு விண்ணப்பங்கள் வரப்பெற்று, இன சுழற்சித் தரவரிசை அடிப்படையில் மாணவர் சேர்க்கையைத் தொடங்கினோம்.

கரோனா அச்சத்தால் நேரில் கலந்தாய்வுக்கு அழைக்காமல் தேர்வான ஒவ்வொருவருக்கும் மெயில், போன், குறுந்தகவல் மூலம் தகவல் அனுப்பினோம். அருப்புக்கோட்டை கல்லூரியில் பி.காம். தவிர பிற பாடப்பிரிவுகளில் இதுவரை 20 சதவீத மாணவர்களே சேர்ந்துள்ளனர். கடந்த ஆண்டைவிட சற்று கல்விக் கட்டணம் கூடுதல் என்றாலும், அத்தொகையை ஏற்பாடு செய்ய முடியாத சூழலும் உள்ளது தெரிகிறது. கட்டணம் செலுத்தக் கூடுதல் அவகாசம், கட்டமைப்பு வசதியை மேம்படுத்தினால் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கையை முதல்வர்கள், இணை இயக்குநர் அலுவலகம் மேற்கொள்ள வேண்டும்'' என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து மண்டலக் கல்லூரிக்கல்வி இணை இயக்குநர் முத்து ராமலிங்கம் கூறுகையில், ‘‘நமது மண்டலத்தில் புதிதாக இணைந்த 4 கல்லூரிகளிலும் அரசு விதிப்படி மாணவர் சேர்க்கை நடக்கிறது. திருமங்கலம் போன்ற நகரையொட்டிய கல்லூரிகளில் முதல் பட்டியலிலேயே பெரும்பாலும் சேர்ந்துள்ளனர். எந்தக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை குறைவாக இருந்தாலும் ஆய்வு செய்து, அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். போக்குவரத்து, சாலை, பேருந்து வசதி போன்ற கட்டமைப்புகள் படிப்படியாக மேம்படுத்தப்படும்’’ என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x