Published : 27 Aug 2021 03:11 AM
Last Updated : 27 Aug 2021 03:11 AM

பள்ளிகளுக்கு ரூ.35 கோடியில் விளையாட்டு உபகரணங்கள்; புதிதாக 2 கல்வி தொலைக்காட்சி சேனல்கள்: சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு

பள்ளிகளுக்கு ரூ.35 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும். இந்த கல்வி ஆண்டில்கூடுதலாக 2 கல்வித் தொலைக்காட்சி அலைவரிசைகள் தொடங்கப்படும். அனைத்து நூலகங்களிலும் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2.40 கோடியில் மின் நூலகம் ஏற்படுத்தப்படும் என்று பேரவையில் அமைச்சர்அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் பள்ளிக்கல்வித் துறை மானியக் கோரிக்கைமீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்கு பதில் அளித்துப் பேசியபோது, துறை அமைச்சர் அன்பில்மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்:

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ரூ.40 லட்சத்தில் ‘செந்தமிழ் சிற்பிகள் அரங்கம்’ அமைக்கப்படும். இங்கு சாகித்ய அகாடமி, ஞானபீடம் போன்ற உயரிய விருதுகளை பெற்ற தமிழ் எழுத்தாளர்களின் புகைப்படங்கள், கையெழுத்துப் பிரதிகள், படைப்புகள் காட்சிப்படுத்தப்படும்.

பொது நூலகங்களுக்காக புத்தகங்கள் கொள்முதல் செய்யப்படும். அனைத்து துறைகளிலும் வெளிவந்துள்ள தலைசிறந்த புத்தகங்கள் கொள்முதல் செய்து, அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வழங்கப்படும். மின் புத்தகங்கள், மின் பருவ இதழ்கள், மின் ஆராய்ச்சி இதழ்களை வாசகர்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில், இணையவழி குறிப்பு உதவி பிரிவு ரூ.6.5 கோடியில் ஏற்படுத்தப்படும்.

இந்திய நூலகத் தந்தை எஸ்.ஆர்.அரங்கநாதன் நினைவு நூலகம் சீர்காழியில் ரூ.1.37 கோடியில் அமைக்கப்படும். செந்நாப் புலவர்ஆ.கார்மேகனார் பெயரில் ராமநாதபுரம் மாவட்டம் அபிராமத்தில் புதிய நூலகக் கட்டிடம் கட்டப்படும். அனைத்து நூலகங்களிலும் அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2.40 கோடியில் மின் நூலகம் ஏற்படுத்தப்படும். சென்னை கன்னிமாரா பொது நூலகம், பாரம்பரியம் மாறாமல் ரூ.3.20 கோடியில் மேம்படுத்தப்படும்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்காக உயர்கல்வி, தொழில், வேலைவாய்ப்புக்கு வழிகாட்டும் ஆலோசனை மையம் அமைக்கப்படும். பள்ளிகளில் பாரம்பரியக் கலைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படும். பள்ளிகளுக்கு ரூ.35 கோடியில் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்படும்.

மாணவர்கள் வேலைவாய்ப்பை பெறும் வகையில் மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி பாடத்திட்டம் சீரமைக்கப்படும். கஸ்தூரிபா காந்தி பெண்கள் உண்டு, உறைவிடப் பள்ளிகள் ரூ.8 கோடியில் தரம் உயர்த்தப்படும். மாற்றுத் திறன் மாணவர்களுக்கு வீட்டிலேயே கல்வி, இயன்முறை மருத்துவம் வழங்கும் திட்டம் ரூ.7.80 கோடியில் தொடங்கப்படும்.

கல்வியில் பின்தங்கியுள்ள ஒன்றியங்களில் பயிலும் மாணவர்களுக்கு ரூ.1 கோடியில் மனநலம், வாழ்வியல் திறன் பயிற்சி அளிக்கப்படும். இந்த கல்வி ஆண்டில் கூடுதலாக 2 கல்வித் தொலைக்காட்சி அலைவரிசைகள் தொடங்கப்படும்.

2021-22 கல்வி ஆண்டு முதல், புதிதாக கொள்கை வகுக்கப்பட்டு, ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒளிவு மறைவின்றிவெளிப்படையாக நடத்தப்படும்.

பள்ளிக்கல்வித் துறையில் பொதுமக்கள், மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து சான்றுகளையும், அவரவர் வீட்டுக்கு அருகில் உள்ள அரசு பொது சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து தாமதம் இல்லாமல் பெறும் திட்டம் செயல்படுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளின் மேம்பாட்டுக்காக சிறந்த முறையில் பணியாற்றும் மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு முதல்வரின் சிறப்பு விருது ஆண்டுதோறும் வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x