Published : 26 Aug 2021 01:42 PM
Last Updated : 26 Aug 2021 01:42 PM

திருவண்ணாமலை கலைக் கல்லூரிக்கு கலைஞர் கருணாநிதி பெயர்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

சென்னை

திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி எனப் பெயர் மாற்றம் செய்யப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடரில் ஒவ்வொரு துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று (ஆக.26) உயர் கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதில், கலசப்பாக்கம் தொகுதி திமுக எம்எல்ஏ சரவணன் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்துப் பேசினார். அப்போது திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்குக் கருணாநிதியின் பெயரைச் சூட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஏற்கெனவே இதுகுறித்து அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், பெயர் மாற்றம் செய்யப்படாமல் இருப்பதாகவும் எம்எல்ஏ சரவணன் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு பதிலளித்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேசினார்.

அமைச்சர் பொன்முடி கூறும்போது, "முதல்வர் ஸ்டாலினின் ஒப்புதலோடு, கலைஞர் கருணாநிதி கலை அறிவியல் கல்லூரி என திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி பெயர் மாற்றம் செய்யப்படும்" என்று தெரிவித்தார்.

இந்த அறிவிப்புக்குத் திருவண்ணாமலை மாவட்ட மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாகப் பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x