Published : 26 Aug 2021 01:09 PM
Last Updated : 26 Aug 2021 01:09 PM

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் எஸ்சி, எஸ்டி காலிப் பணியிடங்களை ஓராண்டுக்குள் நிரப்ப உத்தரவு

புதுடெல்லி

மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் உள்ள எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான காலிப் பணியிடங்களை ஓராண்டு காலத்துக்குள் நிரப்ப வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு மத்தியக் கல்வி அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உயர் கல்வித்துறையின் செயலாளர் அமித் கரே, அனைத்து மத்தியப் பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள், ஐஐடி, என்ஐடி, ஐஐஎம்களின் இயக்குநர்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் ஆகியோருக்குச் சுற்றறிக்கை மூலம் அறிவுறுத்தி உள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

''மத்தியக் கல்வி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள் அதிகம் உள்ளன. குறிப்பாக எஸ்சி, எஸ்டி, ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான இட ஒதுக்கீட்டின் கீழ் பணிபுரியும் பேராசிரியர்களுக்கான காலி இடங்கள் அதிகமாக உள்ளன.

இந்தப் பணியிடங்களை மத்திய உயர்கல்வி நிறுவனங்கள் உடனடியாக நிரப்பும் வகையில் ஒரு திட்டம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி 2021 செப்டம்பர் 5-ம் தேதி முதல் 2022 செப்.4ஆம் தேதி வரை ஓராண்டு காலத்துக்குள் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். இது தொடர்பாக உயர் கல்வி நிறுவனங்கள் சார்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளை அறிக்கையாகச் சமர்ப்பிக்க வேண்டும்.

ஆண்டுதோறும் சமர்ப்பிக்கும் அறிக்கையிலும் காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டது குறித்துத் தனியாகக் குறிப்பிட வேண்டும். அனைத்து மத்திய உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்களும் இதுகுறித்து மாதாந்திர அறிக்கையை அனுப்பவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

அனைத்து மத்தியப் பல்கலைக்கழங்களின் துணைவேந்தர்கள், ஐஐடி, என்ஐடி, ஐஐஎம்களின் இயக்குநர்கள் மற்றும் மத்திய அரசின் நிதியுதவியுடன் இயங்கும் உயர்கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் இதைத் தீவிரமாகப் பின்பற்றி காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது''.

இவ்வாறு மத்திய உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x