Published : 24 Aug 2021 03:08 PM
Last Updated : 24 Aug 2021 03:08 PM

பொறியியல் படிப்பில் சேர, விண்ணப்பிக்க இன்றே கடைசி: செப்.7 முதல் கலந்தாய்வு

தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் தங்கள் பதிவை மேற்கொள்ள இன்றே கடைசி நாள் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

தமிழகப் பள்ளிக்கல்விப் பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த மே மாதம் நடக்க இருந்தது. கரோனா 2-வது அலை பரவலின் தீவிரம் காரணமாக, தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கிடையே பொறியியல் படிப்பில் 2021-22 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேருவதற்கான பணிகளைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்தி வருகிறது.

இந்நிலையில், பி.இ, பி.டெக். பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கு விண்ணப்பிக்க இன்றே (ஆகஸ்ட் 24) கடைசி நாள் ஆகும். மாணவர்கள் www.tneaonline.org அல்லது www.tndte.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

இவர்களுக்கான ரேண்டம் எண் நாளை (ஆக.25-ம் தேதி) வெளியாக உள்ளது. செப்.4-ல் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டு, செப்.7 முதல் அக்.4 வரை கலந்தாய்வு நடைபெறுகிறது. அக்.20-ம் தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட்டு, மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் எனத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.

நேற்று (ஆக.23) மாலை நிலவரப்படி, பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர இதுவரை 1 லட்சத்து 69 ஆயிரத்து 897 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 1 லட்சத்து 38 ஆயிரத்து 732 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியுள்ளனர். 1 லட்சத்து 30 ஆயிரத்து 812 பேர் ஆவணங்களைச் சமர்ப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x